ஊரடங்கு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ள மணிப்பூரின் 3 மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் 
இந்தியா

மீண்டும் ஊரடங்கு... மணிப்பூரில் தொடரும் வன்முறை!

Staff Writer

மாணவர் போராட்டத்தை தொடர்ந்து மணிப்பூரில் உள்ள மூன்று மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பைரேன்சிங் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. அங்கு கடந்த ஆண்டு மே மாதம் குகி, மெய்தி இன மக்களுக்கிடையே கலவரம் வெடித்தது. 200-க்கு மேற்பட்டோர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் குடியேறினர்.

இதையடுத்து மணிப்பூரில் இயல்புநிலை படிப்படியாக திரும்பி வந்த நிலையில், அங்கு மீண்டும் வன்முறை சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன.

மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் கடந்த 7ஆ ம் தேதி நடந்த வன்முறை சம்பவங்களில், எட்டு பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் காயமடைந்தனர். இதனால் மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டக் கோரியும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆளுநர் மாளிகை, தலைமைச் செயலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு மணிப்பூர் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், மணிப்பூர் மேற்கு, மணிப்பூர் கிழக்கு, தௌபால் ஆகிய மூன்று மாவட்டங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளுக்கு மட்டும் ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடும் என்பதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram