மக்களவைத் தலைவர் பதவி- கொடிக்குன்னில் சுரேஷ் வேட்பு மனு தாக்கல். உடன் ஆ.இராசா, மாணிக்கம் தாகூர் 
இந்தியா

சபாநாயகர் பதவி- இதுவரை நடந்திராத சம்பவம்!

Staff Writer

மக்களவைத் தலைவர் பதவிக்கு முதல் முறையாக தேர்தல் நடைபெறவுள்ளது. பா.ஜ.க. கூட்டணி சார்பில் பழைய அவைத்தலைவர் ஓம் பிர்லாவும், காங். கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேசும் இன்று வேட்புமனு தாக்கல்செய்தனர்.

பதினெட்டாவது மக்களவையின் தலைவர் பதவிக்கு ஒருமனதான  தேர்வு சாத்தியமில்லை என்பது உறுதியாகிவிட்டது. அதையடுத்து, இந்தியா கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் கொடிக்குன்னில் சுரேஷ் இன்று முற்பகல் மக்களவைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் வேட்புமனு தாக்கல்செய்தார். 

முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவிடம் பா.ஜ.க. கூட்டணியின் வேட்பாளரை ஆதரிக்குமாறு பாதுகாப்புத் துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் கேட்டுள்ளார். அக்கட்சியின் முன்னாள் தலைவரும் ரேபரேலி தொகுதி எம்.பி.யுமான இராகுல்காந்தி இதைத் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் துணைத்தலைவர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு விட்டுத்தர வேண்டும் என நிபந்தனை வைக்கப்பட்டதற்கு, பா.ஜ.க. அதை நிராகரித்துவிட்டது. எனவே, தாங்களும் பா.ஜ.க. முன்னிறுத்தும் வேட்பாளரை ஒருமனதாக ஆதரிக்கமுடியாது என இந்தியா கூட்டணி திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. 

முதல் முறையாக அவைத்தலைவர் போட்டிக்குத் தேர்தல் நடைபெறுவது, மோடி தலைமையிலான ஆட்சிக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.