தாக்குதல் நடத்தப்பட்ட விமானப்படை வாகனம் 
இந்தியா

ஜம்மு காஷ்மீர்: விமானப் படை வாகனத்தின் மீது தாக்குதல்… வீரர் ஒருவர் உயிரிழப்பு!- ராகுல் கண்டனம்

Staff Writer

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் இந்திய விமானப்படை வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார், மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று காலை ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில், இந்திய விமானப்படை வீரர்கள் இரு வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஐந்து வீரர்கள் காயமடைந்தனர். இவர்கள் உதம்பூர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்த நிலையில் மற்றொருவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற மூன்று வீரர்களுக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துக்கு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பூஞ்ச் தாக்குதலை கோழைத்தனம் என விமர்சித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் நகரில் ராணுவ வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதல் மிகவும் வெட்கக்கேடானது மற்றும் வருத்தமளிக்கிறது. வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு எனது பணிவான அஞ்சலியைச் செலுத்துவதுடன், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். தாக்குதலில் காயமடைந்த ராணுவ வீரர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புகிறேன்,” என்று கூறியுள்ளார்.