ஜெகன்மோகன் ரெட்டி- சந்திரபாபு நாயுடு 
இந்தியா

கடவுளின் பெயரால் சந்திரபாபு அரசியல்- ஜெகன்மோகன் காட்டம்!

Staff Writer

ஆந்திர முதலமைசர் சந்திரபாபு நாயுடு கடவுளின் பெயரால் திசைதிருப்பும் அரசியலில் ஈடுபட்டுள்ளார் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் கூறியுள்ளார். திருப்பதி லட்டு விவகாரத்தில் அமைதிகாத்துவந்த அவர் நேற்று இதுகுறித்து முதலில் கருத்துதெரிவித்தார். 

ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்ட லட்டு நெய் சந்திரபாபு முதலமைச்சராக ஆனபிறகு ஜூலை மாதத்தில்தயாரிக்கப்பட்டது என்றும் அவர்தெரிவித்தார். 

”ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நெய் கொள்முதல் செயல்பாடு நடக்கும். தகுதிக்கான அடிப்படை சில பத்தாண்டுகளாக மாற்றப்படவில்லை. நெய் வழங்கும் நிறுவனங்கள் என்ஏபிஎல் சான்றிதழையும் உற்பத்தித் தரச் சான்றிதழையும் பெற்றிருக்க வேண்டும். தரச்சான்று பெற்ற நெய் வழங்குநர்களிடமிருந்து மட்டுமே தேவஸ்தானம் முதலில் பரிசீலனைக்காக மாதிரிகளைப் பெற்றுக்கொள்ளும். தெலுங்கு தேசம் கட்சி மத விசயங்களை அரசியலாக ஆக்குகிறது. எங்களின் ஆட்சியில் 18 முறை லட்டு தயாரிப்புகளை நிராகரித்திருக்கிறோம்.” என்றும் ஜெகன் மோகன் கூறியுள்ளார். 

இந்த விவகாரத்தில் சந்திரபாபுவின் திசைதிருப்பலைப் பற்றி பிரதமருக்கும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கும் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் ஜெகன்தெரிவித்தார். 

ஜெகனின் கட்சி சார்பில் ஆந்திரப்பிரதேச உயர்நீதிமன்றத்தில் தனி விசாரணை கேட்டு முறையிடப்பட்டுள்ளது.