டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மார்ச் 21 ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். இடையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மட்டும் வெளியே வந்தார்.
இந்நிலையில் அவருக்கு இடைக்கால பிணை வழங்கி உச்சநீதிமன்றம் இன்று காலை உத்தரவிட்டுள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில முதல்வர், 90 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்திருக்கிறார். எனவே நாங்கள் அவரை இடைக்காலப் பிணையில் வெளியில் வர அனுமதிக்கிறோம். ஒரு நபரைக் கைது செய்தால் மட்டுமே விசாரணை நடத்த முடியும் என தொடர்ந்து கூறுவதை ஏற்க முடியாது என இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது. அத்துடன் அமலாக்கத் துறை தன்னை கைது செய்ததை எதிர்த்து கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கை வேறொரு பல நீதிபதிகள் அடங்கிய பெஞ்சுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
ஆனாலும் சிபிஐ கெஜ்ரிவாலை இது தொடர்பாக இன்னொரு வழக்கில் கைது செய்துள்ளதால் அவரால் சிறையில் இருந்து வெளியே வர இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.