வளர்ச்சியடைந்த - வளரும் நாடுகள் கூட்டமைப்பு, ’ஜி-20’ உச்சி மாநாடு டெல்லியில் இன்று தொடங்கியது. தொடக்க உரையாற்றிய பிரதமர், நடப்பு நிலவரங்கள் குறித்து தன் கருத்துகளை முன்வைத்தார். ஒவ்வொரு நாட்டின் தலைவர் முன்பாகவும் அவருடைய நாட்டின் பெயர் தாங்கிய பலகை வைக்கப்பட்டிருக்கும். அதைப்போல, பிரதமர் மோடியின் முன்பாக நம் நாட்டின் பெயர், பாரத் என ஆங்கிலத்தில் குறிக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்னர் எந்தவொரு பன்னாட்டு- உலக மாநாட்டிலும் இந்தியா என்ற பெயரே அதிகாரபூர்வமான பெயராக இடம்பெற்றிருந்தது.
முன்னதாக, கடந்த வாரம் வெளியிடப்பட்ட நாடாளுமன்ற சிறப்புக் கூட்ட அறிவிப்பின்போது, இந்தியா எனும் பெயரை பாரத் என மாற்றவே இந்தக் கூட்டத்தொடர் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்கு முன்னதாகவே பாரத் எனும் பெயருக்கு அதிகாரபூர்வமாக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.