ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் 
இந்தியா

பெண் மருத்துவர் கொலை… வேலை நிறுத்தம் அறிவித்த மருத்துவர்கள் சங்கம்!

Staff Writer

கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதைக் கண்டித்து நாளை நாடு முழுவதும் மருத்துவா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவாா்கள் என்று இந்திய மருத்துவா்கள் சங்கம் (ஐஎம்ஏ) அறிவித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பெண் பயிற்சி மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில், நீதி கேட்டு மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். மேலும், இந்த கொலை வழக்கு விசாரணையை சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், பெண் மருத்துவர் கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் நாளை மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடா்பாக இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஆகஸ்ட் 17-ஆம் தேதி காலை 6 மணி முதல் 18-ஆம் தேதி காலை 6 மணி வரை 24 மணி நேரம் நாடு முழுவதும் உள்ள மருத்துவ சேவைகள் நிறுத்தப்படும்.

அத்யாவசிய மருத்துவ சேவைகள் மற்றும் விபத்து சிகிச்சைப் பிரிவுகள் தவிர வெளி நோயாளிகளுக்கான சிகிச்சைப் பிரிவு மற்றும் நிவீன மருத்துவ சேவைகள் ஏதும் செயல்படாது. திட்டமிடப்பட்ட குறிப்பிட்ட சில அறுவை சிகிச்சைகள் நடத்தப்படாது. மருத்துவா்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசு அதிகாரிகளின் பொறுப்பு’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram