போலே பாபா ஹத்ராஸ் 
இந்தியா

121 பேர் பலி: எப்.ஐ.ஆரில் அந்த பாபா பெயர் இல்லையாமே?

Staff Writer

உத்தர பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்த சம்பவத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், சொற்பொழிவு நிகழ்த்திய போலே பாபாவின் பெயர் இடம்பெறவில்லை.

உத்தர பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் மாவட்டத்தின் புல்ராய் கிராமத்தில் உள்ள திறந்தவெளி மைதானத்தில், "போலே பாபா' என்ற ஆன்மிக குருவின் சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தனியார் சார்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

மாலையில் நிகழ்ச்சி முடிந்து, மைதானத்தைவிட்டு மக்கள் கிளம்பும்போது கடும் நெரிசல் ஏற்பட்டது. "போலே பாபா'விடம் ஆசி பெறவும், அவரது காலடி மண்ணை சேகரிக்கவும் மக்கள் முண்டியடித்தபோது நெரிசல் ஏற்பட்டு, ஒருவர் மீது மற்றொருவர் விழுந்தனர். இதில், இதுவரை 121 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஹாத்ரஸ் மாவட்டத்தில் உள்ள சிக்கந்த்ரா ராவ் காவல் நிலையத்தில் புதிய குற்றவியல் சட்டங்களான பிஎன்எஸ் 105, 110, 126(2), 223 மற்றும் 238 ஆகிய பிரிவுகளின் கீழ் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், நிகழ்வில் சொற்பொழி ஆற்றிய போலே பாபாவின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெறவில்லை.

போலே பாபா என அழைக்கப்படும் நாராயண் சகார் ஹரி அல்லது சகார் விஷ்வ ஹரிக்கு அரியாணா, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட பல வட மாநிலங்களில் செல்வாக்கு அதிகம் என்கிறார்கள்.

இவருக்கு அரசியல் கட்சிகளுடன் தொடர்பு இருப்பதாகவும், அவ்வப்போது அரசியல் தலைவர்களையும் அவர் அடிக்கடி சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது. அவருக்கு உள்ள அரசியல் தொடர்பு காரணமாகவே போலே பாபாவின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்படவில்லை என்கிறனர்.