நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற 13 சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணி கைப்பற்றியது.
பா.ஜ.க. கூட்டணியினர் இரு இடங்களிலும் சுயேச்சை ஓர் இடத்திலும் வெற்றிபெற்றனர்.
மமதா பானர்ஜியின் திருணமூல் காங்கிரஸ் மேற்குவங்கத்தில் முழு வெற்றியைப் பெற்றது. தேர்தல் நடைபெற்ற நான்கு தொகுதிகளிலும் அக்கட்சியே வெற்றிபெற்றது.
இமாச்சலப்பிரதேசத்தின் மூன்று தொகுதிகளில் இரண்டில் காங்கிரஸ் கட்சி வென்றது. முதலமைச்சர் சுக்விந்தர் சுகுவின் மனைவி கம்லேஷ் தாக்குர் டேக்ராவில் வெற்றிபெற்றார்.
ஹமிர்பூரில் காங்கிரசை பா.ஜ.க. தோற்கடித்தது.
உத்தராகண்ட் மாநிலத்தில் பத்ரிநாத், மங்கலார் ஆகிய இரு தொகுதிகளையுமே காங்கிரஸ் கைப்பற்றியது.
பஞ்சாபில் மும்முனைப் போட்டியில் சிக்கிய மேற்கு ஜலந்தர் தொகுதியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி தக்கவைத்துக்கொண்டது.
மத்தியப்பிரதேசத்தில் அமர்வாரா தொகுதியில் காங்கிரசை பா.ஜ.க. தோற்கடித்தது.
தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி தி.மு.க. வெற்றியும் இந்தியா கூட்டணியின் வெற்றியில் அடக்கம்.
பீகாரின் ரூபாலி தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் சங்கர் சிங், ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் காலதர் பிரசாத் மண்டலை 8,246 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.