சீமான் 
செய்திகள்

எடப்பாடி பழனிச்சாமிக்கு புரட்சித் தமிழர் பட்டம்; கலாய்த்துத் தள்ளிய சீமான்!

Staff Writer

‘ஆளாளுக்கு புரட்சி என்று பெயர் வைத்துக்கொண்டு, அந்த பெயரைக் கேவலப்படுத்திவிட்டதாக’ சீமான் மறைமுகமாக எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துள்ளார்.

மதுரையில் கடந்த 20ஆம் தேதி நடைபெற்ற அதிமுக மாநாட்டில், எடப்பாடி பழனிச்சாமிக்கு புரட்சித் தமிழர் பட்டம் வழங்கப்பட்டது. இது தொடர்பாக பெங்களூர் புகழேந்தி, வைத்தியலிங்கம், நிலையூர் ஆதினம் ஆகியோர் விமர்சித்து பேட்டி கொடுத்தனர். தற்போது இந்த பட்டியலில் சீமானும் சேர்ந்துள்ளார்.

திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், அதிமுக மாநாடு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அதிமுக மாநாடு நடந்து நான்கைந்து நாட்கள் ஆகிறது. எதாவது மாற்றம் வந்ததா?. கட்சி தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை காட்டுவதற்காக எடப்பாடி பழனிச்சாமி மாநாடு நடத்தியிருக்கிறார்.”என்றார்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு புரட்சித் தமிழர் பட்டம் வழங்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு, “எனக்கு தெரிந்த ஒரே புரட்சித் தமிழன் சத்யராஜ் தான். ஆளாளுக்கு புரட்சியென்று பெயர் வைத்துக் கொண்டு, வறட்சியாகிட்டாங்க.

எடப்பாடி பழனிச்சாமி பெரியவர் என்பதால் ‘புரட்சித் தமிழர்’ என்று பட்டம் கொடுத்திருப்பார்கள். தமிழர்கள் பெயருக்கு முன்னாள் புரட்சி, வறட்சி என்று போட்டுக் கொள்ள வேண்டியதுதான். புரட்சி என்ற பெயர் கேவலப்பட்டு போச்சு.”என்றார்.