மாமன்னன் திரைப்படக் காட்சி 
சினிமா

சனாதன சர்ச்சை: ‘அதிவீரன்’ உதயநிதிக்கு பெருகும் ஆதரவு!

Staff Writer

சனாதனம் குறித்த விவகாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் சத்யராஜ், இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சென்னையில் கடந்த வாரம் தமுஎகச நடத்திய சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சமூகநீதிக்கு எதிராக இருக்கும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றார். இதற்கு பா.ஜ.க.வினரும், வலதுசாரி அமைப்பினரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் அமைச்சர் உதயநிதி தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்.

இந்த நிலையில், அவருக்கு ஆதரவு தெரிவித்து இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில்,

”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்”

வாழ்த்துக்கள் அதிவீரன் உதயநிதி ஸ்டாலின் சார்” என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல், நடிகர் சத்யராஜ், “அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெளிவாகப் பேசியிருக்கிறார். அவருடைய சிந்தனை, கருத்தியல் தெளிவு, துணிச்சல், அவர் ஒவ்வொரு விஷயத்தையும் கையாளும் விதம் பெருமையாக இருக்கிறது. அதற்காக உதயநிதிக்கு எனது பாராட்டுகள்” என்று கூறியுள்ளார்.

ஏற்கெனவே இயக்குநர், பா.ரஞ்சித், நடிகர் விஷ்ணு விஷால் ஆகியோர் ஆதரவு தெரிவித்ததிருந்தது குறிப்பிடத்தக்கது.