நடிகர் கமல்ஹாசன் 
சினிமா

“நாக்கை கடித்துக்கொண்டு கேட்க வேண்டியதைக் கேட்டுவிடுவார் விஜயகாந்த்”! – கமல்ஹாசன்

Staff Writer

“கிராமத்து மனிதர் போல் நாக்கைக் கடித்துக்கொண்டு கேட்க வேண்டியதை விஜயகாந்த் கேட்டுவிடுவார்” என்று விஜயகாந்த் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

தே.மு.தி.க. தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது உடல் அரசு மரியாதையுடன் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் நேற்று விஜயகாந்த் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நடிகர் சங்கத் தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் மற்றும் நடிகர், நடிகைகள் உள்ளிட்டோர் விஜயகாந்த் படத்துக்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மேலும், நடிகர் கமல்ஹாசன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி, தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, சத்யஜோதி தியாகராஜன், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, நடிகர்கள் சிவக்குமார், ஒய்.ஜி.மகேந்திரன், விக்ரம்,ஜெயம் ரவி, ராஜ்கிரண் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

ஆர்.கே. செல்வமணி

நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, "சாதாரண திரைப்படக் கல்லூரி செல்வமணியாக இருந்த என்னை ஆர்.கே. செல்வமணியாக மாற்றியவர் விஜயகாந்த். தனக்கு மட்டுமல்லாமல் நடிகர் சங்கத்துக்கும் பெருமையை பெற்று தந்தவர்.

நடிகர் சங்கக் கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயரைச் சூட்ட வேண்டும். அதற்கான தகுதி அவருக்கு இருக்கிறது. நடிகர் சங்கம் இன்று தலைநிமிர்ந்து நிற்பதுக்கு காரணம் விஜய்காந்துதான். நடிகர் சங்கத்துக்கு விஜயகாந்த் பெயர் வைக்கலாமா என்று யோசிப்பதே அவரை அவமானப்படுத்துவதாக நினைக்கிறேன்.

விஜயகாந்த் குறித்து ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறேன். அதை அவர் உயிருடன் இருந்தபோதே வெளியிடலாம் என்று நினைத்தேன். அது முடியாமல் போய்விட்டது." என்றார்.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் பேசும்போது, ‘‘விஜயகாந்தை முதல்முறையாக சந்தித்த போது எப்படி பழகினாரோ அதேபோல் தான் அவர் உச்சத்தை தொட்டபோதும் நடந்து கொண்டார். பல அவமானங்களையும், விமர்சனங்களையும் கடந்துதான் இந்த உயரத்துக்கு விஜயகாந்த் வந்தார். தனக்கு ஏற்பட்ட நிலை யாருக்கும் வரக் கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்தார். கடைநிலை நடிகர்களுக்கும் அவர் குரல் கொடுத்தார். இது அவர்கள் செய்த பாக்கியம்.

1970 – 80 களில் சமூக அரசியல் கோபங்களை பிரதிபலிக்கும் ஒரு சினிமா உருவமாக விஜயகாந்த் திகழ்ந்தார். அவரது கோபம் நியாயமானது. எந்த அரங்கமாக இருந்தாலும் விஜயகாந்த் பயப்படமாட்டார். கிராமத்து மனிதர் போல் நாக்கை கடித்துக் கொண்டு கோபமாக கேட்க வேண்டியதை கேட்டுவிடுவார். தனக்குப் பிடிக்காதவர்களைக்கூடக் கூப்பிட்டுப் பேசுவார். அந்த மாதிரியான குணநலன்களை நாம் காப்பியடிக்கலாம்" என்றார்.

நிகழ்வில், விஜயகாந்தின் மகன்கள் விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் கலந்துகொண்டனர்.