ராஷ்மிகா மந்தனா 
சினிமா

“இதேபோல் பள்ளி, கல்லூரி காலங்களில் நடந்திருந்தால்!” - ராஷ்மிகா வேதனை!

Staff Writer

சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ள மார்பிங் வீடியோ குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா வேதனை தெரிவித்துள்ளார்.

நடிகை ராஷ்மிகா மந்தனா, ஆபாச உடையில் வருவது போன்ற வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. “வீடியோவை மார்பிங் செய்து வெளியிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று நடிகர் அமிதாப் பச்சன் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், இது குறித்து நடிகை ராஷ்மிகா தனது ட்விட்டர் தளத்தில் வேதனையுடன் பதிவிட்டுள்ளார். “சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ள Deep Fake வீடியோ குறித்து பேசுவதற்கு வருத்தமாக உள்ளது. தொழில்நுட்பம் இப்படி தவறாக பயன்படுத்துவதை பார்க்கும் பொழுது பயமாக இருக்கிறது. ஒரு பெண்ணாகவும் நடிகையாகவும் எனக்கு பாதுகாப்பாகவும் உறுதுணையாகவும் இருக்கும் எனது குடும்பம், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

இது என்னுடைய பள்ளி, கல்லூரி காலங்களில் நடந்திருந்தால் எப்படி சமாளித்திருப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இதனால் பலர் பாதிக்கப்படுவதற்கு முன் இது குறித்து தெரியப்படுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்பு, இதுபோன்ற தொழில்நுட்பத்தில் 'காவாலா' பாடலுக்கு சிம்ரன் ஆடுவது, மோடி சினிமா பாடல்கள் பாடுவது போன்ற வீடியோக்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது.