வன்னியர் சாதியினருக்கு தனியாக 20 சதவீத இடஒதுக்கீடு வழங்காவிட்டால், 87ம் ஆண்டில் நடத்தப்பட்டதைப் போல மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாசு கூறியுள்ளார்.
வன்னியருக்கான தனி ஒதுக்கீட்டை வலியுறுத்தி சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் பாமக வன்னியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தலைமைவகித்து வன்னியர் சங்க நிறுவனரும், பா.ம.க. நிறுவனருமான ராமதாசு பேசியது:
எங்களின் நியாயமான கோரிக்கைகளை ஆட்சியாளர்களுக்கு எடுத்துச்சொல்லவே தமிழகம் முழுவதும் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. நீதி வழங்குங்கள் என்று கேட்டு கோபத்துடன் போராடுகிறோம். அருந்ததியர்களுக்கு, இஸ்லாமியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கிடைப்பதற்கு நாங்கள் போராடினோம். நான் களத்தில் நின்றேன். எனவே வன்னியர்களுக்காகவும் போராடுகிறேன். எல்லா மக்களுக்காகவும், நீதி கிடைக்க நான் போராடி வருகிறேன். அதனால் யாரும் இதை சாதி வெளிப்பாடு என்று கூறி விட முடியாது.
வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கேட்பது சாதி வெறியால் அல்ல. இது குறுகிய நோக்கமும் ஆகாது. தமிழ்நாட்டு மக்கள் தொகையில் 2 கோடி பேர் வன்னியர்கள். அவர்கள் இன்னும் பின்தங்கிய நிலையிலே இருந்து வருகின்றனர். கல்வியில் பின் தங்கிய மாவட்டம், குடிசைகள் நிறைந்த மாவட்டம் என்று பார்த்தால் அது வன்னியர்கள் வாழும் பகுதியாக தான் இருக்கும். அவர்களுக்காக போராட என்னை தவிர யார் இருக்கிறார்கள்? நாங்கள் சமூக நீதிக்காக போராடுகிறோம்.
1973-ல் சட்டநாதன் கமிஷன் அறிக்கையின் பரிந்துரையை அமல்படுத்தியிருந்தால் இப்போது இந்த பிரச்சினை வந்திருக்காது. இடஒதுக்கீட்டை வலியுறுத்தி 1987-ல் 7 நாட்கள் தொடர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம். இந்த போராட்டத்தை உலகமே அதிசயமாக பார்த்தது.
வாகனங்கள் ஓடாததால் சென்னை மக்கள் பதறினார்கள். இந்த போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அமெரிக்காவிற்கு சிகிச்சைக்கு சென்றிருந்தார். அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் என்னை அழைத்து போராட்டம் குறித்து கேட்டறிந்தார். இதை ஏன் என்னிடம் முதலிலேயே சொல்லவில்லை என்று கேட்டார். இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு எம்.ஜி.ஆர். வன்னியர்களுக்கு 15 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வந்தது. ஆனால் அதற்குள் அவர் மறைந்து விட்டார்.
முதலமைச்சராக கருணாநிதி பொறுப்பு ஏற்ற பிறகு அவர் என்னை அழைத்து பேசினார். அவரிடம் நாங்கள் கோரிக்கைகளை கூறினோம். உடனே அவர் எந்த சாதிக்கும் தனியாக ஒதுக்கீடு தர முடியாது. வன்னியர் உள்பட 109 சாதிகளை சேர்த்து இடஒதுக்கீடு வழங்குவதாக கூறினார்.
அருந்ததியர், இஸ்லாமியர்களை போல வன்னியர்களுக்கும் தனி இடஒதுக்கீடு கொடுங்கள் தான் என்று தான் கேட்கிறோம். தனி இடஒதுக்கீடு கிடைக்காவிட்டால் 87-ம் ஆண்டு நடைபெற்ற போராட்டம் போல் மீண்டும் ஒரு போராட்டத்தை தொடங்குவோம்.
எங்களின் கோரிக்கையை நீங்கள் நிறைவேற்றினால் தஞ்சாவூரில் உங்களுக்கு பாராட்டு விழா நடத்தி `மனுநீதி சோழன்' பட்டத்தை வழங்க தயாராக இருக்கிறோம். இல்லையென்றால் கடுமையான போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கும். வன்னியர்களின் போராட்டக்குணமும், என்னுடைய போராட்ட குணம் பற்றியும் உங்களுக்கு தெரியும். அந்த நிலைக்கு ஆளாக்காமல் எங்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீட்டை நீங்கள் வழங்க வேண்டும் என்று ராமதாசு பேசினார்.
|
|
| |
|