ஸ்ரீரங்கம் கோவிலில் சிலைகள் மற்றும் புராதன பொருட்கள் திருடு போனது தொடர்பான வழக்கில், முன் ஜாமின் வழங்கக் கோரி டிவிஎஸ் நிறுவன தலைவர் வேணு சீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது. சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றியதை எதிர்த்து, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், டிவிஎஸ் நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசனையும் எதிர்மனுதாரராக சேர்த்தார்.
இதுபற்றி நீதிபதிகள் கேள்வி எழுப்பிய போது, அவர் மீதும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வேணு சீனிவாசன், முன் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில், தன் நிறுவனத்தின் சார்பில் தமிழகம் மற்றும் கேரளாவில் 100 கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் 2004ம் ஆண்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷகத்தின் போது அமைக்கப்பட்ட திருப்பணிக் குழுவில் தன்னை உறுப்பினராக சேர்த்திருந்ததாகவும், அக்கோவிலுக்கு தன் சொந்த செலவாக 70 லட்சம் ரூபாய் செலவில் வண்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டதாகக் குறிப்பிட்டார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் நிர்வாக அறங்காவலர் என்ற முறையில், 2015ம் ஆண்டு நடந்த கும்பாபிஷகத்தின் போது, 25 கோடி ரூபாய் செலவில் கோவில் வளாகம் முழுக்க சீரமைப்புப் பணிகள் மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.
தற்போது, சிலைத் திருட்டு தொடர்பான வழக்கில் தன்னை காவல் துறையினர் கைது செய்யக் கூடும் என்பதால் முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார். இந்த மனு, நீதிபதி மகாதேவன், நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு முன் நாளை விசாரணைக்கு வர உள்ளது.