அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், சட்டத்திற்கு புறம்பான பொதுக்குழுவை நிராகரிப்பதாக கூறி ஓபிஎஸ் தரப்பினர் வெளிநடப்பு செய்தனர்.
அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மஹாலில் நடைபெற்றது. இதில், அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு முடக்குவதைக் கண்டித்தும், ஆளும்கட்சியின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் பொதுக்குழுவில் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது. இது தவிர முல்லைப் பெரியாறு அணை, மேகதாது, காவிரி பிரச்சனை போன்ற பொது விவகாரங்களை உள்ளடக்கிய 23 தீர்மானங்களை நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்தது.
கூட்டம் தொடங்கியது முதலே பன்னீர்செல்வத்துக்கு எதிராகவும், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. தீர்மானங்களை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் முன்மொழிய வேண்டும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். எனினும் தீர்மானங்களை, நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி ஆகியோர் அறிவித்தனர்.
இதனிடையே, பொதுக்குழு தொடங்கியதில் இருந்தே ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டு வந்தன. ஒருகட்டத்தில், பொதுக்குழு மேடையில் இருந்து வைத்திலிங்கத்துடன் கிழே இறங்க ஓபிஎஸ் எழுந்தார். அப்போது, மைக்கில் பேசிய வைத்திலிங்கம், ‘சட்டத்துக்கு புறம்பாக நடைபெறும் இந்த கூட்டத்தை நிராகரிக்கிறோம்’ என்று பேசியதோடு ஓபிஎஸுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினார். இதையடுத்து ஓபிஎஸ் தரப்பினர் பொதுக்குழுவில் இருந்து வெளியேறினர்.