![]() |
12 வழக்குகளில் விடுதலை கிடைத்திருக்கிறது. 13வது வழக்கை கருணாநிதி வாபஸ் பெற்றார் -ஜெPosted : வெள்ளிக்கிழமை, மே 14 , 2010 06:11:42 IST
'சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாற்றப்பட்ட தமிழக அமைச்சர்கள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய யோக்யதை இல்லாத கருணாநிதிக்கு, துணிவுடன் வழக்குகளை நீதிமன்றத்தில் எதிர்கொள்ளும் என்னைப் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது.
தர்மத்தை கடைபிடித்து வரும் எனக்கு இதுவரை இறைவன் அருளால் 12 வழக்குகளில் விடுதலை கிடைத்திருக்கிறது. 13வது வழக்கை ''ஆதாரம் இல்லை'' என்று வெட்கமின்றி வாபஸ் பெற்ற கருணாநிதி, என்னைப் பற்றி அவதூறாகப் பேசுவது கேலிக்கூத்து ' என்று ஜெயலலிதா கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,'நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில், சட்டத்தையும் மதிக்காமல், சட்டமன்ற மரபுகளையும் காற்றில் பறக்கவிட்டு, 'எத்தனை நாள் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே' என்ற தலைப்பில் என் மீது அவதூறு சுமத்தி ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் மக்களை தினம் தினம் ஏமாற்றிக் கொண்டிருக்கின்ற கருணாநிதி. என் மீது தொடர்ந்து அவதூறு சுமத்துவதை கருணாநிதி வாடிக்கையாக கொண்டு இருக்கிறார். உதாரணமாக மைனாரிட்டி தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் சிறுதாவூர் பிரச்சனை குறித்து கருணாநிதி என் மீது பொய் குற்றச்சாற்று சுமத்தினார். அங்கே எனக்குச் சொந்தமான எந்த நிலமும் இல்லை, வாடகைக்கு எடுத்த வீட்டில் தங்குகிறேன் என்று உடனே நான் என்னுடைய நிலைமையை விளக்கினேன். அதன் பின்னரும் அதை விசாரிக்க ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்தார் கருணாநிதி. அவ்வாறு அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தையும் நான் வரவேற்றேன். இருப்பினும், நான் சட்டமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொண்டபோது, காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் மூலம் சிறுதாவூர் பிரச்சனையை எழுப்பச் செய்தார். அதை கருணாநிதியும் ஆதரித்தார். உடனே நான் எழுந்து, இந்தப் பிரச்சனைக்காக ஒரு விசாரணை ஆணையத்தை போட்டுவிட்டு, அதைப் பற்றி இங்கே விவாதிப்பது விதியை மீறிய செயல் என்று கண்டனம் தெரிவித்தேன். இது மட்டுமல்லாமல், அவ்வப்போது பொதுக்கூட்டங்கள் வாயிலாக, என் மீது அவதூறு பரப்ப வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில், தலித்துகளுக்கான நிலத்தை நான் அபகரித்து கொண்டுவிட்டதாக கருணாநிதி அபாண்டமாக பழி சுமத்தி பேசி வந்தார். தற்போது அந்த விசாரணை ஆணையம் தனது அறிக்கையை சமர்ப்பித்துவிட்டது. இந்த அறிக்கை வெளி வந்த பிறகு இதில் உள்ள உண்மை நிலை நாட்டு மக்களுக்குத் தெரியவரும். இதேபோன்று, ஒவ்வொரு பிரச்சனையிலும் தொடர்ந்து என் மீது அவதூறு பரப்பிக் கொண்டு வருகிறார் கருணாநிதி. அதற்கெல்லாம் என்னிடம் தெளிவான பதில் இருக்கிறது. இருந்தாலும், நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருவதன் காரணமாக இதற்கெல்லாம் பதில் அளிப்பதை தவிர்த்து வந்தேன். ஆனால், நான் மக்கள் ஆதரவு பெற்ற தலைவர் என்பதாலும், கருணாநிதியின் பொய்க் குற்றச்சாற்றிற்கு பதில் அளிக்காமல் இருந்தால் அது உண்மை என்று ஆகிவிடும் என்பதாலும், தற்போது என் மீது அபாண்டமாக கருணாநிதியால் சுமத்தப்பட்ட குற்றச்சாற்றிற்கு பதில் அளிக்க விரும்புகிறேன். 1996 முதல் 2001 வரையிலான தி.மு.க ஆட்சிக் காலத்தில், என்னை அரசியலில் இருந்தே ஒழித்து கட்ட வேண்டும் என்ற தீய நோக்கத்தில் என் மீது பல்வேறு பொய் வழக்குகளை புனைந்தார் கருணாநிதி. அவற்றில் 12க்கும் மேற்பட்ட வழக்குகளில் நீதிமன்றங்களால் நான் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறேன். ஆதாரங்கள் இல்லை என்ற காரணத்தினால் லண்டன் ஓட்டல் வழக்கு மைனாரிட்டி தி.மு.க. அரசாலேயே திரும்பப் பெறப்பட்டு விட்டது. இதுதான் தி.மு.க. அரசு போட்ட வழக்குகளின் லட்சணம். இந்தச் சூழ்நிலையில் தற்போது பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தின் முன்பு நடைபெற்று வரும் வழக்கு 13 ஆண்டுகளாக தாமதப்படுத்தப்பட்டு வருவதற்கு நான் தான் காரணம் என்ற வகையில் கருணாநிதி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். இது விஷமத்தனமானது மட்டுமல்ல, கண்டனத்திற்குரியதும் ஆகும். 1991 முதல் 1996 வரை நான் முதலமைச்சராக இருந்தபோது, ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்குவதாகச் சொல்லி கொண்டு, 66 கோடி ரூபாய் அளவுக்கு நான் சொத்து சேர்த்துவிட்டதாக கூறியிருக்கிறார் கருணாநிதி. இது அப்பட்டமாக பொய். முதலமைச்சருக்கான சம்பளத்தை வாங்கித்தான் காலத்தை கழிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. சுயமாக சம்பாதித்து வாங்கிய சொத்துக்கள் இருந்ததால் தான், என்னுடைய சம்பள பணம் மக்களுக்கு பயன்பட வேண்டும் என்ற ஒரு நல்லெண்த்தில், சம்பிரதாயத்திற்காக ஒரு ரூபாய் மட்டும் பெற்றுக் கொண்டேன். இந்த வழக்கு என் மீது கருணாநிதியால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக போடப்பட்ட பொய் வழக்கு. வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இதைப்பற்றி நான் விரிவாக குறிப்பிட விரும்பவில்லை. விஞ்ஞானப்பூர்வமாக ஊழல் செய்வதில் வல்லவர் என்று சர்க்காரியா விசாரணை ஆணையத்திடம் சான்றிதழ் பெற்ற கருணாநிதிக்கு என்னைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக 1997ஆம் ஆண்டு அப்போதைய தி.மு.க. அரசினால் என் மீது ஒரு பொய் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 1997 முதல் 2001 வரை கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சி தான் நடைபெற்றது. அப்போது அதற்கு நான் எந்த இடையூறும் ஏற்படுத்தவில்லையே? பின்னரும், இந்த வழக்கை தாமதப்படுத்த நான் எந்த இடையூறும் ஏற்படுத்தவில்லை. 2003ஆம் ஆண்டு இந்த வழக்கு முடிவுக்கு வரும் தருவாயில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக 28.2.2003 அன்று தி.மு.க. பொதுச் செயலர் க.அன்பழகன், மேற்படி வழக்கை வேறு மாநிலத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். இதனையடுத்து, சென்னை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடையாணை விதித்தது. இதன் காரணமாக வழக்கு ஒரு வருட காலம் தாமதப்படுத்தப்பட்டது. அன்பழகன் பெயரில் வழக்குப் போடச் செய்தது கருணாநிதி தான். எனவே, இந்த வழக்கு தாமதப்படுத்தப்பட்டதற்குக் கருணாநிதி தான் காரணம். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், இந்த வழக்கு பெங்களூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர், மேற்படி வழக்கையும், லண்டன் ஓட்டல் வழக்கையும் ஒருங்கிணைத்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஓர் ஆணை பிறப்பித்தது. அந்த ஆணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தவர் தி.மு.க.வைச் சேர்ந்த அதே அன்பழகன். இதற்கு 5.8.2005 அன்று உச்ச நீதிமன்றம் தடையாணை விதித்தது. பின்னர் 22.1.2010 அன்று அன்பழகனே மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டதால், உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தடையாணை முடிவுக்கு வந்தது. இதிலிருந்து மேற்படி வழக்கு என்னால் தாமதப்படுத்தப்படவில்லை என்பதும், இந்த வழக்கு தாமதப்படுத்தப்படுவதற்கு காரணமே கருணாநிதி தான் என்பதையும் அறிவார்ந்த மக்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம். இந்த வழக்கு விரைவில் முடிவுக்கு வந்து அதிலிருந்து நான் விடுதலையாகி விட்டால், எனக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்ய எந்த அடிப்படையும் இருக்காதே! என்னைப் பற்றி அவதூறு பிரச்சாரம் செய்வதற்காகவே இந்த வழக்கை முடிக்கவிடாமல் இன்றுவரை அதற்கு உயிரூட்டி வைத்திருக்கிறார் கருணாநிதி. எனவே, என்னை அரசியலில் இருந்து ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதற்காக, இந்த வழக்கில் எனக்கு எப்படியாவது தண்டனை பெற்றுத் தந்துவிட வேண்டும் என்று பகீரத பிரயத்தனம் மேற்கொண்டு இருக்கிறார் கருணாநிதி. அதில் சிறிது சுணக்கம் ஏற்படும்போது என் மீது பொய் குற்றச்சாற்று சுமத்துகிறார். அந்த வகையில்தான் என் மீது அபாண்டமாக குற்றம் சுமத்தி தற்போது ஓர் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் கருணாநிதி. சட்டமன்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, அவையின் உறுப்பினர் குறித்து, அவைக்கு வெளியே அறிக்கை வெளியிடுவது அவையின் உரிமையை மீறிய செயல் ஆகும். இது முதல் குற்றம். இரண்டாவதாக, நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும் போது, அதைப் பற்றி பேரவைக்குள் தெரிவிப்பதும் பேரவை விதிகளுக்கு முரணானதாகும். இது மட்டுமல்லாமல், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அது பற்றி பேசுவது நீதிமன்ற அவமதிப்பிற்கு சமமாகும். அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட கூட்டாமல், சர்க்காரியா கமிஷன் அறிக்கைகள் மீது மேல் நடவடிக்கை தேவையில்லை என்று தானாகவே கோப்பில் கையெழுத்திட்டு, தன்னைத் தானே பல வழக்குகளிலிருந்து விடுவித்துக் கொண்ட கருணாநிதிக்கு, தன்னுடைய மகனை கொலை வழக்கிலிருந்து விடுவித்து மத்திய அமைச்சராக்கிய கருணாநிதிக்கு, மதுரை பத்திரிகை எரிப்புச் சம்பவத்தில் மூன்று அப்பாவி உயிர்களை பலிவாங்கிய சதிகாரர்களுக்கு விடுதலை பெற்றுத் தந்த கருணாநிதிக்கு, பனையூர் இரட்டை கொலை வழக்கில் பாதிக்கப்பட்டவர்களை நாட்டை விட்டே ஓடச் செய்த கருணாநிதிக்கு, சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாற்றப்பட்ட அமைச்சர்களான துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம், ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கோ.சி.மணி, கே.என்.நேரு, பொன்முடி, முன்னாள் மத்திய அமைச்சர் ரகுபதி, முன்னாள் மதுரை மேயர் குழந்தைவேலு ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய யோக்யதை இல்லாத கருணாநிதிக்கு, துணிவுடன் வழக்குகளை நீதிமன்றத்தில் எதிர்கொள்ளும் என்னைப் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது? மாட்டை முழுங்கிவிட்டு மலைப்பில் படுத்துக் கொண்டிருக்கும் மலைப்பாம்பை போல், ஸ்பெக்ட்ரம் ஊழலின் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாயை விழுங்கிவிட்டு, அதைப்பற்றி வாய் திறக்க வக்கில்லாத கருணாநிதிக்கு, ஏழை, விவசாயிகள், தாழ்த்தப்பட்டவர்களை மிரட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள நிலங்களை தி.மு.க.வினர் அபகரித்துக் கொண்டது குறித்து வாய் திறக்காத கருணாநிதிக்கு, வஃக்ப் வாரிய நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் தி.மு.க.வினர் குறித்து மவுனம் சாதிக்கும் கருணாநிதிக்கு, சட்டத்திற்கும், நீதிக்கும் கட்டுப்பட்டு இருக்கும் என்னைப் பற்றி பேச கருணாநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது? தான் ஆட்சிக்கு வரும் போதெல்லாம் தன் மீதுள்ள வழக்குகளை உடனே வாபஸ் பெறும் கருணாநிதி, ஒரு உண்மையை மறந்துவிட்டு பேசுகிறாரே? 2001 முதல் 2006 வரை நான் முதலமைச்சராக ஆட்சி புரிந்தபோது, நான் நினைத்திருந்தால், கருணாநிதி என் மீது போட்ட பொய் வழக்குகள் அத்தனையையும் வாபஸ் பெற்றிருக்க முடியாதா? செய்திக்க முடியும்! ஆனால் கருணாநிதி பாணியில், அவ்வாறு நான் செய்ய விரும்ப வில்லை. தர்மத்திற்கும், சத்தியத்திற்கும், நேர்மைக்கும் கட்டுப்பட்டு, தைரியமாக நீதிமன்றங்களில் போராடி நான் நிரபராதி என்பதை நிரூபித்து வழக்குகளிலிருந்து விடுதலை பெறுவேன என்று சபதம் செய்து, அவ்வாறு எனது மனசாட்சி காட்டும் வழியில் செயல்பட்டு வருகிறேன். தர்மத்தை கடைபிடித்து வரும் எனக்கு இதுவரை இறைவன் அருளால் 12 வழக்குகளில் விடுதலை கிடைத்திருக்கிறது. 13வது வழக்கை ''ஆதாரம் இல்லை'' என்று வெட்கமின்றி வாபஸ் பெற்ற கருணாநிதி, என்னைப் பற்றி அவதூறாகப் பேசுவது கேலிக்கூத்து' என்று கூறியுள்ளார்.
|
|