சேலத்தில் உதயநிதி ஸ்டாலின், கொளத்தூர் மணி, மாரி செல்வராஜ் ஆகியோரை நேரில் சந்தித்து பேரறிவாளன் மற்றும் அற்புதம்மாள் நன்றி தெரிவித்தனர்.
சேலத்திற்கு பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம்மாள் இருவரும் வருகை தந்தனர். அப்போது சேலம் மாவட்டம் மேட்டூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் படிப்பகத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியை சந்தித்தனர்.
இதையடுத்து சேலம் தனியார் ஹோட்டலில் பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்த சந்திப்பின்போது திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதைத்தொடர்ந்து, பேரறிவாளன், அற்புதம்மாள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் பேசியதாவது, 31 ஆண்டுகள் சாமானியர்களின் குரல் எடுபடாது என்ற நிலையில் 31 ஆண்டுகளுக்குப் பிறகுதான் என் மகனுக்கு விடுதலை கிடைத்துள்ளது. இனி சுதந்திர மனிதனாய் என் மகன் வலம் வருவார். சட்டப்படி நாங்கள் போராடினோம். நிறைய பேர் சிறையில் வாடுகின்றனர். அவர்களுக்கும் இந்த தீர்ப்பு பயனுள்ளதாக அமையும் என்று பேசினார்.
மேலும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜ் ஆகியோர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தோம். பேரறிவாளன் வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க திருமணம் செய்ய முடிவு செய்துள்ளோம். அவருக்கு ஏற்ற பெண் கிடைத்தால் திருமணம் செய்து வைப்போம். அதற்கான பெண் தேடலும் இனி நடைபெறும் என்று அற்புதம்மாள் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேரறிவாளன் கூறுகையில், தமிழக அரசு எங்களுக்கு பேருதவியாக இருந்துள்ளது. மாநில அமைச்சரவையின் முடிவு இறுதியானது என்பதை இந்த தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது மகிழ்ச்சி அளிக்கின்றது என்றார்.