அரசன் அன்றே கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும் என்பது பழமொழி. அப்படித்தான் பழனி முருகன் கோவில் ஐம்பொன் உற்சவர் சிலை செய்ததில் பல கோடி மோசடி செய்ததாக முத்தையா ஸ்தபதி தற்போது சிறைக்கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார் இரண்டாவது முறையாக.
சம்பவம்-1
இந்த ஆண்டின் ஜனவரி மாதத் தொடக்கத்தில் பக்தர்களுக்கு அதிர்ச்சியூட்டும் செய்தி ஒன்று ஊடகங்களில் வெளியானது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் புதிய உற்சவராக நிர்மானிக்கப்பட இருந்த சோமாஸ் கந்தர் சிலையில் போதிய தங்கம் கலக்கவில்லை என்ற புகார் எழுந்தது. புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் சிலையில் தங்கத்தின் அளவுகுறித்த ஆய்வு நடத்தினர். பி.எம்.ஐ (positive metal Identification) என்ற எலக்ட்ரானிக் கருவி மூலம் சோமாஸ் கந்தர் சிலை மற்றும் ஏலவார் குழலி ஆகிய சிலைகளைப் பரிசோதனை செய்தனர்.
பரிசோதனையின் முடிவில் அந்த சிலைகளில் சிறிதளவு கூட தங்கம் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [இங்கு, பி.எம்.ஐ - Positive Metal Identification என்ற கருவியைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும். சிலைகளில் கலந்துள்ள உலோகத்தின் அளவை மதிப்பீடு செய்ய இந்தக் கருவி பயன்படுகிறது. இந்தக் கருவி அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது என்பது கூடுதல் தகவல்]. இந்து சமய அறநிலைத்துறை அறிக்கைப்படி இந்தச் சிலைகளில் 5.75 கிலோ தங்கம் இருக்க வேண்டும். சிலையைச் செய்த ஸ்தபதி முத்தையா சோமாஸ் கந்தர் சிலையில் 75 சதவிகிதம் வரை தங்கம் இருப்பதாக அறிக்கை கொடுத்துள்ளார். பி.எம்.ஐ பரிசோதனை மூலம் அவர் சொன்னது பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது. முத்தையா ஸ்தபதி உள்ளிட்ட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டார்கள். முத்தையா ஸ்தபதி பிறகு ஜாமினில் வெளிவந்தார்.
சம்பவம் -2
பழனி முருகன் கோவில் ஐம்பொன் உற்சவர் சிலை செய்ததில் பல கோடி மோசடி செய்ததாக முத்தையா ஸ்தபதி உட்பட இருவரை ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நேற்று முந்தினம் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரத்திலும், பழனியிலும் சிலைகள்தான் வேறு. ஆனால் குற்றச்சாட்டு ஒன்றுதான். இங்கு குற்றம் சாட்டப்பட்டவரும் சாட்சாத் ஒருவரேதான். முத்தையா ஸ்தபதி.
பழனியில் சித்தர் போகரால் நிர்மாணிக்கப்பட்ட நவபாஷான மூலவர் சிலை உள்ளது. இதிலிருந்து நவபாஷானத்தை சுரண்டி ஒரு கும்பல் சேதப்படுத்தியது. இதனால் நவபாஷான சிலையை கர்ப்பகிரகத்தில் இருந்து அகற்றிவிட்டு ஒரு அறையில் பாதுகாப்பாக வைத்து, அதுக்கு பதிலாக புதிய ஐம்பொன் சிலை செய்து, மூலஸ்தானத்தில் வைக்க திட்டமிடப்பட்டது. ஆகம விதிகளை மீறி கடந்த 2004 ஆம் ஆண்டு 200 கிலோ எடையில் புதிய ஐம்பொன் சிலை செய்ய வேண்டும் என்றும், அதில் 10 கிலோ தங்கம் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. புதிய சிலை செய்யும்போது அந்தப் பணி கோவிலில் நடைபெறவேண்டும் என்பதும் ஆகம விதிதான். ஆனால் ஆகம விதிமுறைகளையெல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டு சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்தபதி முத்தையாவுக்கு சொந்தமான ஸ்வர்ணம் என்ற சிற்பக் கலைக் கூடத்தில் உற்சவர் சிலை செய்யப்பட்டது. ஆனால் இந்த சிலை செய்ததில் 1.31 கோடி ரூபாய் அளவில் மோசடி நடந்ததை 14 ஆண்டுகளுக்குப் பின்னர் ஐ.ஜி பொன். மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு இப்போது வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. அந்தச் சிலையைப் பரிசோதித்த ஐ.ஐ.டியைச் சேர்ந்த தொழில்நுட்பக்குழுவினர் நடத்திய ஆய்வில் 22 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட ஐம்பொன் சிலையில் 10 சதவீதம் கூட தங்கம் இல்லை எனவும், ஐம்பொன்னால் சிலை செய்யப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த மோசடி தொடர்பாக சிலையைச் செய்த முத்தையா ஸ்தபதி நேற்று மீண்டும் சென்னையில் கைது செய்யப்பட்டார். அவருடன் பழனி முருகன் கோயிலின் முன்னாள் நிர்வாக அதிகாரியாக இருந்த கே.கே.ராஜா என்பவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். [இவர் முன்னாள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழு உறுப்பினர்.] கைது செய்யப்பட்டவர்கள் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பத்மஸ்ரீ விருதுபெற்ற 77 வயதாகும் முத்தையா ஸ்தபதி மாமல்லபுரம் சிற்பக் கல்லூரியில் பயின்றவர். அமெரிக்கா மற்றும் லண்டனில் அதிக எண்ணிக்கையிலான இந்துக் கோயில்களை நிர்மாணித்தவர். உலகத்திலேயே மிக உயரமான சமாதி நிலையில் உள்ள புத்தர் சிலையை இலங்கையில் நிர்மாணித்தவர் இவர். இவ்வளவு சிறப்புகள் இருந்தும் அவர் இரண்டு முறை சிலை மோசடி விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பழனி நவபாஷான சிலை விவகாரத்தில் பதினான்காண்டுகளாக தெய்வத்தின் குரலை அமுக்கி வைத்திருந்த முத்தையா ஸ்தபதி மீண்டும் சிறைக்குள் போயிருக்கிறார்.
தெய்வம் நின்று கொல்லும்!
- சரோ லாமா