நிவர் புயலால் 7 மாவட்டங்களில் 8,470 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
நெற்பயிரைப் பொருத்தவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 750 ஹெக்டேர், செங்கல்பட்டு 2,760, ராணிப்பேட்டை 205, திருவண்ணாமலை 526, விழுப்புரம் 1,032, கடலூர் 1,134, திருவள்ளூர் 2,063 என மொத்தம் 8,470 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்ததாக வேளாண்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேற்கண்ட மாவட்டங்களில் 428 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த உளுந்து உள்ளிட்ட பருப்பு வகைகளும், 570 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வித்துக்களும், 998 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த இதர பயிர்களும் மழைநீரில் மூழ்கியுள்ளன. ஆகமொத்தம் 9,468 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர் உள்ளிட்ட விவசாயபயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நிவர் புயல், மழையால் தோட்டக்கலைப் பயிர்களில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் நேற்று கணக்கிட்டனர். அதில், வேலூர்,கடலூர், விழுப்புரம், திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 382 கிராமங்களில் 1,334 விவசாயிகள் 914 ஹெக்டேரில் பயிரிட்டிருந்த வாழை, மரவள்ளிக்கிழங்கு, தர்பூசணி, பப்பாளி, காய்கறிகள் ஆகியபயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்திருப்பது தெரியவந்துள்ளது.