செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பாலஜோதி ராமச்சந்திரன் எழுதி ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கின் வெளியிட்டிருக்கும் புதிய நாவல் சுழியம்.
பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பாலஜோதி ராமச்சந்திரன் எழுதி ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கின் வெளியிட்டிருக்கும் புதிய நாவல் சுழியம். நாவல் எழுதுவதற்கு எந்த விஷயம் தூண்டுதலாக இருந்தது என்பது பற்றியும், நாவல் பேசும் கதைக்களம் என்ன என்பது குறித்தும் பாலஜோதி ராமச்சந்திரனிடம் கேட்டோம். “ஸீரோ டிகிரி பப்ளிஷிங் நாவல் போட்டிக்கான அறிவிப்பை கவிஞர் குட்டிரேவதி அவருடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். கடுமையான போட்டி இருக்கும் என்பது போல் பதிவிட்டிருந்தார். அதற்குக் கோபப்பட்டு பின்னூட்டமிட்ட ராம்ஜி, எளிமையாக எழுதக் கூடிய அளவுக்கு திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் போட்டியில் கலந்து கொள்ளலாம் என பதிவிட்டார். இதற்கு முன்னதாகவே போட்டியில் கலந்து கொள்ளலாம் என முடிவெடுத்திருந்ததால், நாவல் எழுதும் அறிவிப்பை ராம்ஜிக்கு பின்னூட்டத்திலேயே தெரிவித்தேன். என்னிடம் எப்போதும் இருபது சிறுகதைகளுக்கான ‘ஒன் லைன்’ இருக்கும். அதிலொரு கதை தான் சைபர். பேய் பிசாசு என்றாலே எல்லோரும் வழக்கமான முறையில் எழுதுகையில், ரோபோ ஏன் பேயாக இருக்கக் கூடாது என்று யோசித்து எழுதிய கதை தான் சைபர். நாவலாக எழுதுகையில் சுழியம் என பெயர் மாற்றி விட்டேன். கடைக்காரர் ஒருவர் ஆண், பெண்களை ரோபோக்களை வைத்து பேய், பிசாசுகளை காட்டும் தொழில் செய்து கொண்டிருப்பார். அதற்குக் கட்டணமாக ஐம்பதாயிரம் ரூபாய் வசூலிப்பார். ஒருவேளை ரோபோக்கள் பேயைக் காட்டவில்லை என்றால் இருபத்தி நான்கு மணி நேரத்தில் அந்த தொகை திருப்பி கொடுத்துவிடுவார். நாவலில் எழிலன் என்ற கதாபாத்திரம், கடைக்காரரின் இந்த வித்தியாசமான முயற்சியைப் பார்த்து, பெண் ரோபோவை வாடகைக்கு எடுத்துச் செல்வார். அப்படி அழைத்துச் செல்லும் ரோபோவுடன் முகிலன் உறவு கொள்வார். பொழுது விடிந்ததும் அந்த ரோபோவைக் கொண்டு விட்டுவிட்டு, ரோபோ பேயைக் காட்டவில்லை என்பார். பிறகு தான் முகிலன் தெரிந்துகொள்வான் ரோபோ தான் பேய் என்று. இது தான் சிறுகதையின் கதைக்கரு. இதைத்தான் பிறகு நாவலாக விவரித்து எழுதினேன். ஸீரோ டிகிரி பப்ளிஷிங் இந்த ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி நாவல் போட்டிக்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார்கள். உடனே அடுத்த இரண்டு மாதத்தில் நாவலை எழுதி ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கிற்கு அனுப்பிவிட்டேன். உண்மை சொல்ல வேண்டுமானால். நாவலில் செயற்கைத் தன்மை கொஞ்சம் இருக்கும். நாவலை நான் எழுதவில்லை. அது தான் என்னைப் பயன்படுத்தி எழுதிக் கொண்டது. நாவலில் நடுத்தர வர்க்கத்தினரின் பாலியல் பிரச்சனைகள், அதை அவர்கள் எப்படி தீர்த்துக் கொள்கிறார்கள் என்பதை எல்லாம் பேசியிருக்கிறேன். எதிர்காலத்தில் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பெண் ரோபோக்களை வைத்து பாலியல் தொழில் செய்யும் நிலைமை வரும் எழுதியிருக்கிறேன். நாவலில் அறிவியல் புனைவும், இரண்டாயிரம் வருடம் பழமையான பேய், பிசாசு பற்றிய நம்பிக்கையும், கீழடி போன்ற பெருமை கொள்ளத்தக்க விஷயமும் இருக்கின்றது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், நாவலில் வரும் நாயகன் தொல்பொருள் அதிகாரி. அவர்களுடைய குழு ‘கூலிமாதோரை’ என்ற நெல்வகையை கண்டுபிடிப்பதில் தீவிரமாக இருக்கும். அந்த நெல்வகை கிட்டத்தட்ட மூவாயிரம் வருடம் பழமையானது. அதை பேய் பெருநெல் என்று அழைக்கலாம். நாவலில் நெல்லின் பெயரை அதன் காலத்தை ஒரு கற்பனையாகத்தான் நாவலில் எழுதினேன். ஆனால், நாவலை எழுதி முடித்த பிறகு, சிவகளையில் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான நெல்லை கண்டுபிடித்ததாக செய்தி வெளிவந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ” என்றார்.
நாவல்:சுழியம்
ஆசிரியர்: பாலஜோதி ராமச்சந்திரன்
பதிப்பகம்:ஸீரோ டிகிரி பப்ளிஷிங்
விலை: ரூ.250 தா.பிரகாஷ்