திமுக சிறுபான்மையினர் அணி சார்பாக "நல்லாட்சி மலர்ந்திட இதயங்களை இணைப்போம்" எனும் தலைப்பிலான கருத்தரங்கம் இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது. திமுக சிறுபான்மையினர் அணி சார்பில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த கருத்தரங்கம் நடைபெற்றது.
மேலும் கருத்தரங்கில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய மு.க.ஸ்டாலின்,சிறுபான்மை தலைவர்களுக்கு ஒன்று சொல்ல கடமைபட்டுள்ளேண், எண்ணிக்கையில் ஒன்றுமில்லை, எவ்வளவு இடம் என்பது முக்கியமில்லை, நாம் வென்று ஆட்சி அமைக்கப் போகிறோம். கருணாநிதியின் ஆட்சியை உடன் இருந்து பார்த்தவன், அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறேன் என்பதை நிச்சயம் நிரூபிப்பேன்.
பக்தியை அரசியல் வியாபார பொருளாக மாற்றி விட்டனர். தங்களது கொள்கைகள், சாதனைகளை சொல்லிக்கொள்ள முடியாதவர்கள்தான் ஆன்மீகத்தில் பிரிவினையை ஏற்படுத்த பார்க்கிறார்கள் என குற்றஞ்சாட்டினார்.
மேலும், அண்ணா - கருணாநிதி இணைப்பு பாலமாக இருந்தது இஸ்லாமிய விழா தான். கருணாநிதி வாழ்க்கையில் இணைத்தும் பிணைந்தும் இருந்தவர்கள் இஸ்லாமியர்கள் தான் என்றார்.
இந்தியை ஆட்சி மொழியாக மற்ற கூடாது தமிழ் தான் இருக்க வேண்டும் என்று கூறியவர் காகிதே மில்லத் என பேசினார்.
சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலே பாஜக அதிமுக தான், பாஜக கொண்டு வந்த குடியுரிமை சட்டம், முத்தலாக் சட்டம் என சிறுபான்மையினரை பாதிக்கும் வகையில் கொண்டு வந்த அனைத்து திட்டத்திற்கும் அதிமுக ஆதரித்து இருக்கிறது, இது தான் அண்ணா வழியை பின்பற்றுவதா என ஸ்டாலின் கேள்வியெழுப்பினார்.
ஜெயலலிதா பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று கூறினார் ஆனால் தற்போது பாஜகவுடன் கூட்டணி வைத்து யாருடைய கனவை நிறைவேற்றி இருக்கிறார் என கேள்வியெழுப்பினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். முதலமைச்சர் பழனிச்சாமிக்கு சிறுபான்மையினரை பற்றி பேச அருகதை இல்லை, குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்த முதலமைச்சர் பழனிச்சாமி இஸ்லாமியருக்கு செய்த இரட்டை துரோகம் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சிறுபான்மையினருக்கு மட்டும் துரோகம் செய்யவில்லை அனைத்து மக்களுக்கும் துரோகம் செய்துள்ளார். வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் ஒரு மாதத்தை கடந்து விவசாயிகள் போரடி வருகிறார்கள், அவர்கள் என்ன சிறுபான்மையினரா என கேள்வியெழுப்பிய அவர், அனைத்து இனத்திற்கும் தான் துரோகம் செய்து இருக்கிறார் என குற்றஞ்சாட்டினார்.
2 நாட்களுக்கு முன் விவசாயி ஒருவரின் 2 வயது பேத்திக்கு என்னை மன்னித்து விடு என்று மண்ணில் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார் விவசாயி அது வேதனையாக இருக்கிறது இந்த நிலைமைக்கு தள்ளி விட்டது இந்த அரசு என கூறினார்.
யார் யார் எல்லாம் நான் தோற்கடிக்க வேண்டும் என்று நினைக்கிறேனோ அந்த இடத்திற்கு எல்லாம் நானே நேரில் சென்று கிராம சபை கூட்டம் நடத்தி வருகிறேன் என்ற அவர், பேராசிரியர் பேசும் போது 7 இடத்தில் அதிமுக வெற்றி பெரும் என்று கூறியிருக்கிறார், அதையும் விட்டு வைக்க மாட்டேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.