Posted : சனிக்கிழமை, நவம்பர் 12 , 2022 13:00:52 IST
இயக்குநர் சக்திவேல், பழிதீர்க்கும் கதையை மிக வித்தியாசமான பின்புலத்தில் சொல்ல முற்பட்டிருக்கிறார். ஒரு குடும்பம், அதை சுற்றி நடக்கும் மர்மங்கள் என நகரும் படம் இது.
காதல் திருமணம் செய்து கொண்டு பரத் (ஹரி) – வாணி (ரமா) போஜன் ஆகியோர் மகனுடன் வாழ்ந்து வருகின்றனர். வாணி போஜனுக்கு வரும் கனவில், தன் கணவரும் தானும் மர்ம நபர் ஒருவரால் அடித்துக் கொலை செய்யப்படுவதாக காணுகிறார். இதனைத் தொடர்ந்து நடக்கும் சில சம்பங்கள் அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இதனால், குலதெய்வத்தை வணங்குவதற்கு குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்கின்றனர். குலதெய்வத்தை வணங்கிய கையோடு பரத் சென்னைக்கு வர வேண்டி உள்ளது. ஊரில் இருந்து புறப்படும் பரத் குடும்பம் ஆளரவமற்ற காட்டில் மாட்டிக் கொள்கிறது. அப்போது, வாணிபோஜனின் கனவில் வந்த மர்ம நபர் அவர்களை கொல்ல வருகிறார். அந்த மர்ம நபர் யார்? எதற்காக அவர் பரத் குடும்பத்தை கொல்ல நினைக்கிறார்? என்பதை திகிலுடன் சொல்லும் திரைப்படமே மிரள்.
நடு இரவில், நடு காட்டில் பரத் பேசும் வசனங்கள் உயிரோட்டம் இன்றி உள்ளது. திகில் படம் என்பதால் லாஜிக் மிஸ்ஸிங்கை கவனத்தில் எடுத்துக் கொள்ளக் கூடாது போல!
சில இடங்களில் பரத் நடிப்பு நன்றாக இருந்தாலும், மனைவியையும், மகனையும் தேடி அலையும் காட்சிகளில் அவர் இன்னும் நன்றாக நடித்திருக்கலாம். அளவான வசனங்கள் பேசி, உம்மென்று இருக்கும் கதாபாத்திரத்திற்கு வாணி போஜன் உயிர் கொடுத்திருக்கிறார். உதாசீனமாக நடந்துகொள்ளும் கே.எஸ்.ரவிக்குமார், காம கொடூரனாக வரும் ராஜ்குமார், பொறுப்பான குடும்பத் தலைவி மீரா கிருஷ்ணன் என ஒவ்வொருவரின் நடிப்பும் நன்றாக உள்ளது.
திகில் படத்திற்கு ஏற்ற இசையை பிரசாத்.எஸ் வழங்கியுள்ளார். சில இடங்களில் பின்னணி இசையே திகிலை ஏற்படுத்துகிறது. படம் பெரும்பாலும் இரவிலேயே நடக்கிறது. இரவை கண்டாலே பயப்படும் அளவிற்கு சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது.
திகிலால் அலறடித்திருக்க வேண்டிய படத்தில், சில காட்சிகள் மட்டுமே திகிலுடன் இருப்பது படத்திற்கு பெரும் பலவீனம்.