![]() |
அதிபர் தேர்தலில் இரணிலுக்கு ஆதரவு - இராஜபக்சே கட்சி முடிவுPosted : வெள்ளிக்கிழமை, ஜுலை 15 , 2022 18:44:41 IST
இலங்கையின் அரசு அதிபர் கோத்தாபய இராஜபக்சே பதவிவிலகியதை அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் அபேவர்த்தன இன்று காலை முறைப்படி அறிவித்தார். அதையடுத்து தற்காலிக அதிபராக பிரதமர் இரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றுக்கொண்டார். இலங்கை உயர்நீதிமன்றத் தலைமைநீதிபதி அவருக்குப் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
நாளை 16ஆம் தேதி நாடாளுமன்றம் கூடியபின்னர், அரசுத் தலைவர் தேர்தலுக்கான நடவடிக்கைகள் தொடங்கும். அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் 19ஆம் தேதி தொடங்கும். அந்நாட்டின் அரசமைப்பின்படி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து அதிபரைத் தேர்ந்தெடுப்பார்கள். 20ஆம் தேதியன்று வாக்குப்பதிவு நடத்தப்படும் என முன்னரே அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள் ஒருவரைத் தேர்வுசெய்வார்கள். இப்போதைக்கு, தற்காலிக அதிபராக இருக்கும் இரணில் விக்கிரமசிங்கே, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசா, மகிந்த இராஜபக்சே கட்சியின் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஆகியோரும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
மகிந்த தலைமையிலான இலங்கை பொதுசன முன்னணியில் இடையில் அதிருப்தி அடைந்த அழகப்பெருமவுக்கு ஆதரவளிக்காது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இன்று அறிவித்தார்.
இலங்கை அரசியலில் நிலவிவரும் குழப்பம், கொந்தளிப்புக்கு இடையே நேரெதிராகச் செயல்பட்டுவந்த இரணிலும் இராஜபக்சேக்களும் கோத்தாபயவின் தப்பியோட்டத்தை முன்னிட்டு, இணக்கமாகியுள்ளனர். கோத்தாபய தப்பிய தகவல் தெரிந்தும் இரணில் அதை வெளியில் சொல்லவில்லை என போராட்டக்காரர்களும் எதிர்க்கட்சியினரும் அவரைக் கடுமையாகச் சாடிவருகின்றன. இந்த சூழலில் இரணிலுக்கே ஆதரவு என இராஜபக்சே தரப்பு தீர்மானித்திருப்பது, அவர்களுக்கு இடையிலான கூட்டை உறுதிப்படுத்தியுள்ளது. English Summary
Mahinda's SLPP supports Ranil in President election
|
|