விதியை எதனாலும் மாற்ற முடியாது என்பதை டைம் மிஷின் துணையோடு நிறுவ முற்படும் திரைப்படமே கணம்.
படத்தின் நாயகன் ஆதி (ஷர்வானந்த்) ஒரு இசைக்கலைஞர். தயக்கமும், சிறு வயதிலேயே தாய இழந்த தவிப்பும் அவரை குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளேயே உழல வைக்கிறது. அவருடைய நண்பர்கள், பாண்டி (ரமேஷ் திலக்) வீட்டுத் தரகர், கதிர் (சதீஷ்) திருமணத்துக்கு மணப்பெண் கிடைக்காமல் விரக்தியில் இருப்பவர். மூவரும் தங்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுத் தேடிக் கொண்டிருக்கும் போது சைன்டிஸ்ட் ரங்கி குட்டப்பால் (நாசர்) அதற்கு ஒரு தீர்வு செல்கிறார், அதுதான் டைம் மிஷின்.
கடந்த காலத்திற்கு சென்றால் தங்களின் பிரச்சனைகளை சரி செய்துவிடலாம் என்ற எண்ணத்தில், டைம் மிஷின் மூலம் இருபது ஆண்டுகளுக்கு பின்னோக்கி செல்கின்றனர். பின்னோக்கி சென்ற அவர்களின் காலப் பயணம் பயனளித்ததா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதிக் கதை.
ஏற்கனவே தமிழில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிற்கு டைம் டிராவல் படங்கள் வந்திருந்தாலும், அறிமுக இயக்குநர் ஸ்ரீகார்த்தி இயக்கி இருக்கும் கணம் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமில்லாத படம் எனலாம். தாய் – மகன் செண்ட்டிமெண்ட் பேசி தப்பித்துவிட்டார். கடந்த காலத்திற்கு வரும் மூவரும், தங்களது சிறு வயது வெர்ஷன்களை சந்திக்கும் காட்சிகளை ரசிக்கும்படி உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். இருபது வருடத்திற்கு முந்தைய விஷயங்களை அப்படியே கொண்டு வந்திருக்கின்றனர்.
நாயகனாக நடித்திருக்கும் ஷர்வானந்த் நடிப்பு சில இடங்களில் ரசிக்கும்படி இருந்தாலும், பெரும்பாலான இடங்களில் உள்மனதின் தவிப்பை முகபாவனையில் கொண்டுவர முடியாமல் சொதப்பியிருக்கிறார். அசால்டான உடல்மொழி, மிரட்டும் குரல், அடுத்த நொடியில் பதில்கொடுக்கும் கெட்டிக்காரத்தனம் என தனது தனித்துவமான நடிப்பால் ரமேஷ் திலக் அசத்தியிருக்கிறார். சதிஷூம் மிக இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். சைன்டிஸ்டாக வரும் நாசரின் தோற்றத்தை நேர்த்தியாக உருவாக்கத் தவறியிருக்கின்றனர். நாயகி ரித்து வர்மாவிற்கு வேலையே இல்லை. சிறுவர்களாக நடித்திருக்கும் ஜே, நித்தியா, ஹிதேஷ் ஆகிய மூவரும் கச்சிதமான கதாபாத்திர தேர்வு. அமலாவின் நடிப்பு கனக்கச்சிதம்.
இடைவேளைக்குப் பிறகு தாய் – மகன் செண்டிமெண்ட் காட்சிகளின் நீளத்தைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
சுஜித் சாரங் ஒளிப்பதிவு தொண்ணூறுகளின் பிற்பகுதியை அழகாக காட்டியுள்ளார். ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசையும் பாடலும் படத்திற்குக் கூடுதலான பலத்தை சேர்த்திருக்கிறது.
காலப் பயணத்தின் மூலம், வாழ்க்கையை மாற்றுவதற்கான வாய்ப்பு அமைந்தும், அதைத் தவறவிட்ட நாயகன் பேசும் வசனங்கள் வழக்கமான அறிவுரை தன்மை கொண்டதாக உள்ளது.
அறிவியல் மீது நம்பிக்கையை விதைக்க வாய்ப்பும் இருந்தும் இயலாமை, பாசம், மூடத்தனம் போன்றவற்றை விதைக்கும் படமாக கணம் மாறிப்போனது அவலம்.