தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளை ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்க அனுமதிக்கக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் இத்தலார் என்ற கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 2 ஏக்கர் பரப்பளவு கொண்ட நீர்நிலையை அந்த பகுதியை சேர்ந்த சீனிவாசன், ஹாலன், லீலாவதி மற்றும் ரமேஷ் குமார் ஆகியோர் ஆக்கிரமித்துள்ளனர்.
இத்தலார் கிராமத்தில் உள்ள 150 குடும்பங்களுக்கு நீராதரமாக உள்ள இந்த நீர் நிலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் மாவட்ட ஆட்சியர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கிராம மக்கள் பல முறை மனு அளித்திருந்தும் ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் இருந்து வந்தது.
இதையடுத்து, சீனிவாசன் உள்ளிட்ட 4 பேர் ஆக்கிரமித்துள்ள இந்த நீர் நிலையை மீட்கக்கோரி இத்தலார் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, 150 குடும்பங்களுக்கு நீராதராமாக உள்ள இந்த நீர் நிலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், கோடை காலங்களில் கடும் நீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
மேலும், கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் பல அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலையை ஆய்வு கூட செய்யாமல் தங்களை அலைகழித்ததாகவும் குற்றம் சாடப்பட்டது.
இதனை கேட்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், நீர் நிலைகள் ஆக்கிரமிப்பால் மனித இனமே அழிந்து போகும் என தெரிவித்தனர். தமிழகத்தில் ஒரு அங்குலம் நீர் நிலை பகுதி கூட ஆக்கிரமிக்க அனுமதிக்ககூடாது எனவும் அறிவுறுத்தினர்.
மேலும், இத்தலார் கிராமத்தில் நான்கு பேரால் ஆக்கிரமிக்கப்பட்ட 2 ஏக்கர் பரப்பளவு கொண்ட நீர் நிலையை மீட்டு அது தொடர்பான அறிக்கையை 4 வாரத்தில் தாக்கல் செய்ய நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.