![]() |
’தோனி’யர்கள்!Posted : திங்கட்கிழமை, அக்டோபர் 11 , 2021 16:06:02 IST
டெல்லிக்கு எதிரான சிஎஸ்கேயின் குவாலிபையர் ஆட்டத்தின் இறுதியில், சி.எஸ்.கேவின் வெற்றி மிகவும் கடினமாகத் தோன்றியது. அந்த கணத்தில் ஜடேஜாவுக்கு முன்பாக தோனி உள்ளே ஆட வந்தபோது
அம்புட்டுதான்.. முடிஞ்சுது…
சிஎஸ்கே தோல்வி நிச்சயம்..
டீமை பினிஷ் பண்ணிருவாரு இந்த பினிஷர்..
இப்படித்தான் பல வாட்ஸப் குழுக்களில் போட்டுக்கொண்டிருந்தார்கள். தோனியின் தீவிர ரசிகர்கள் சிலருக்கு மட்டும் இன்னும் நம்பிக்கை ஒட்டிக்கொண்டிருந்தது. ரித்துராஜ் கெய்க்வாட் அவுட் ஆகி தோனி உள்ளே வந்தபோது 19-வது ஓவர். 11 பந்துகளில் 24 ரன்கள் தேவைப்பட்டன.
ஜடேஜா வந்தால்தானே நன்றாக இருக்கும். இவர் வந்தா சோலி முடிஞ்சிடுமே என்று நினைக்கும் அளவுக்கு ‘தல’யின் பார்ம் இருந்தது.
வந்தவுடன் எதிர்கொண்ட முதல் பந்து மட்டையில் படவில்லை. முன்னதாக மொயின் அலி ஒரு நான்கும் ஒன்றும் அடித்திருந்தார். அவேஷ்கானின் அந்த ஓவரின் ஐந்தாவது பந்து. மீண்டும் தோனி மட்டையைச் சுழற்ற,, ஆறு ரன்கள்!
அடுத்த பந்தும் மட்டையில் படவில்லை!
இருபதாவது ஓவரின் முதல் பந்து. டாம் கரனின் பந்துவீச்சில் மொயின் அலி ஆட்டமிழப்பு.
ஐந்து பந்துகளில் 13 ரன்கள் வேண்டும். ஜடேஜா எதிர்முனையில். பந்தை எதிர்கொள்கிறார் தோனி.
துள்ளிக்குதித்து ஒரு அடி. பந்து நான்கு கால் பாய்ச்சலில் ஓட, நாலு ரன்கள்! அடுத்த பந்து. கிட்டே வந்த பந்து. அடித்த அடியில் மட்டையின் உள் பகுதில் பட்டு ஓடி, நான்கு ரன்கள்!
அடுத்த பந்து அகலமாக விலகிச்செல்ல, வைட் என்பதால் ஒரு ரன்!
அடுத்த பந்து நீளம் குறைவாக வீசப்பட்டது. மடக்கி ஆள் இல்லாத திசையில் தல அடித்தது! நான்கு ரன்கள்! ஆட்டம் முடிந்துவிட்டது!
எம்புட்டு நாட்கள் ஆகிவிட்டன, ஆட்டத்தை முடிக்கும் மாபெரும் வீரனைப் பார்த்து.
பார்வையாளர்கள் வரிசையில் தோனியின் மனைவி, மகளை அணைத்து அழ, ‘தோனி’யர்கள் உற்சாகத்தில் அதிர்ந்தார்கள்!
வாட்ஸப் குழுக்களில் அமைதியாக இருந்த ’தோனி’யர்கள் தலடா! என்று உற்சாகமாக கூவினர்.
சிஎஸ்கே இறுதிப்போட்டிக்குள் முதல் அணியாக நுழைந்தது!
ஏன் தோனி ஜடேஜாவுக்கு முன்பாக உள்ளே வந்தார்?
“யாரை அனுப்பலாம் என்றபோது நான் போகிறேன் என்றார் கேப்டன். அவரது கண்களைப் பார்த்தேன். நிச்சயம் இன்று இவர் முடிப்பார் என்பது தெரிந்தது. எத்தனை முறை அவர் ஆட்டங்களை முடித்தவர். இன்னிக்கும் முடித்துக்கொடுப்பார் என்பது அந்த கண்ணில் தெரிந்தது. அதனால் அவரைத் தடுக்கவில்லை!’ உணர்ச்சி வயப்பட்டார் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்.
பிளமிங் மட்டுமா? தோனி என்பது ஒரு ஆள் அல்ல; அது ஒரு உணர்வு. ஆட்டம் பார்த்து அழுதுகொண்டிருந்த குட்டிப்பிள்ளைகளுக்கு பந்தைத் தூக்கிப் போட்டாரே தோனி, அந்த செயல் எழுப்பும் நெகிழ்ச்சிகரமான உணர்வு. அவரது தோல்விகள், தடுமாற்றங்கள் எல்லாம் அவரும் நம்மைப் போன்ற மனிதன் என்று நமக்கு மேலும் நெருக்கமாக்கிக் கொண்டே இருக்கின்றன. சாமானியன் எப்போதும் ஏங்கும் ஒரு சூப்பர்மேன் தருணத்தை தரக்கூடிய வாய்ப்பை அவர் நிகழ்த்திக் காட்டுகையில், அவர் மனிதன் என்கிற எல்லையைக் கடந்து ‘மனசுக்கு நெருக்கமான உணர்வு’ என்கிற நிலையை அடைந்துவிடுகிறார்.
இன்னும் தோனிக்கு மிச்சம் இருப்பவை சில ஆட்டங்கள்தான். அதற்குள் அவரை தனக்கு நெருக்கமான உணர்வாக மேலும் மேலும் கண்டு ரசித்து விட ஆசைப்படுகிறான், ‘தோனி’யன். அவன் தனியன் அல்ல.
-ஒரு ’தோனி’யன்
|
|