செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நாம் விரும்புவது மாதிரியெல்லாம் வாழ்க்கை அமைந்துவிடாது என்பதை ஒருவரின் வாழ்க்கை நிகழ்வுகளை வைத்து சொல்ல முற்படும் திரைப்படமே பபூன்.
நாம் விரும்புவது மாதிரியெல்லாம் வாழ்க்கை அமைந்துவிடாது என்பதை ஒருவரின் வாழ்க்கை நிகழ்வுகளை வைத்து சொல்ல முற்படும் திரைப்படமே பபூன். நாயகன் வைபவ் (குமரன்) கூத்தில் பபூன் வேஷம் போடக் கூடியவர். அவருடைய ஆருயிர் நண்பர் ஆந்தகுடி இளையராஜாவும் (முத்தையா) கூத்து ஆடக்கூடியவர். வாழ்க்கையில் எப்படியாவது உயர்ந்த இடத்திற்கு வர வேண்டும் என நினைக்கும் நாயகன் பரம்பரை பரம்பரையாக செய்து வந்த கூத்து தொழிலை விட்டுவிட்டு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். அதற்கு பணம் தேவைப்படுவதால் ஓட்டுநராக வேலைக்குச் சேர்கிறார் நண்பருடன் சேர்ந்து. முதல் நாளிலேயே இவர்கள் ஓட்டும் வண்டியில் உப்புக்குப் பதிலாக போதைப் பொருளை வைத்து அனுப்புகிறார்கள். இதை அறியாமல் வண்டியை ஓட்டி வரும் குமரனும் முத்தையாவும் காவல் துறையிடம் சிக்குகின்றனர். இதற்குப் பின்னர் இருவரின் வாழ்க்கையும் என்ன ஆனது? போதைப்பொருள் கடத்தும் கும்பல் யார்? அதற்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை சொல்வதே படத்தின் மீதிக்கதை. படத்தின் தொடக்கத்திலேயே தமிழக கடற்கரை பற்றி சொல்லப்படும் தகவல்கள், நசிந்து வரும் கூத்துக் கலைஞர்களின் வாழ்க்கை போன்றவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துவிடுகிறது. இந்த எதிர்பார்ப்பை படம் முழுக்க கொண்டு செல்ல முற்பட்டிருக்கிறார் அறிமுக இயக்குநர் அசோக் வீரப்பன். அதேபோல் சமகால அரசியல், ஈழ அகதிகளின் அவல நிலை, காவல் துறையின் எதேச்சதிகாரம், கடற்கரையையொட்டி நடக்கும் போதைப்பொருள் கடத்தால் என பல்வேறு விஷயங்களை இயக்குநர் பேச முற்பட்டிருந்தாலும், அதில் சில போதாமைகள் இருப்பதை உணர முடிகிறது. திரைக்கதையில் இயக்குநர் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். நாயகனாக வரும் வைபவ் நடிப்பில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. வழக்கமான நடிப்பு. இதற்கு நேர் எதிரானது ஆந்தக்குடி இளையராஜாவின் நடிப்பு. தனது லாவகமான நடிப்பால் அவரே கவனம் பெறுகிறார். ஈழ அகதியாக வரும் அனகா ஈழத்தமிழில் சரியாக பேசி நடித்திருக்கிறார். ஜோ.ஜோ.ஜார்ஜ், ஜெயபாலன், ஆடுகளம் நரேன் ஆகியோரும் குறைணாத அளவிற்கு நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும் பாடலும் படத்திற்கு பெரும் பலம் எனலாம். சந்தோஷ் நாராயணனும் ஆந்தக்குடி இளையராஜாவும் சேர்ந்து பாடியுள்ள “மடிச்சு வச்ச வெத்தல” பாடல் தாளம் போட வைக்கிறது. தூத்துக்குடி, நாகப்பட்டினம் போன்ற கடற்கரை பகுதியை இவ்வளவு அழகாக யாரும் ஒளிப்பதிவு செய்யவில்லை என்று சொல்லும் அளவிற்கு ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமனின் உழைப்பு மெச்ச வைக்கிறது.
“தண்டிக்கனும்னா மட்டும் உங்க சட்டத்துல இவ்வளவு செக்ஷன தேடுறீங்களே. எங்களுக்கு என்னென்ன உரிமை இருக்குன்னு உங்க சட்டம் சொல்லுதுன்னு தெரியுமா?”, “துரோகத்தால பல சாம்ராஜ்யங்களே அழிச்சிருக்கு. நாமெல்லாம் எம்மாத்திரம்?”, “பேப்பர்ல வர போட்டோவை காலையில பாத்தா மதியம் மறந்துருவாங்கல்ல”, “சினிமால நடிச்சாதான் அரசியல்ல பெரிய ஆளா வரமுடியும்” என்பது போன்ற வசனங்கள் இயக்குநரின் உழைப்பைக் காட்டுகிறது.
போதைப் பொருள் கடத்தல் என்றாலே சர்வதேச பின்புலம், சாகச நாயகன், 2கே கிட்ஸ் போன்ற உளறல்கள் இல்லாமல் நடப்பதை யதார்த்தமாகப் பேசியதால் பபூன் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்.