அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 0 லண்டன் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்! 0 தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது 0 ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை 0 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம் 0 ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

அ. முத்துலிங்கம் சிறுகதைகள் : ஒரு பறவைப் பார்வை !- பகுதி -3 -அருள்செல்வன்

Posted : வெள்ளிக்கிழமை,   ஆகஸ்ட்   07 , 2020  16:40:26 IST


Andhimazhai Image

கதைகளில் வெளிப்படும் தகவல்கள், உண்மைகள்!

ஸ்வீடனில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் தானாக முன்வந்து கருணைக்கொலை செய்து கொள்ளலாம் என்று சட்டம் அனுமதிக்கிறது.அப்படியே எழுபது வயது முதிர்ந்தவர்கள் தனது பிறந்தநாளில் அனைவருக்கும் பரிசு கொடுத்து விட்டு மருத்துவமனைக்குச் சென்றுவிடுவது சகஜமாகி வருகிறது என்கிற அதிர்ச்சி உண்மை வலிக்கிறது.அந்த நாட்டின் மக்கள் தொகை 110 லட்சம் அந்த எண்ணிக்கை தாண்டாமல் வெகு கவனமாக பார்த்துக் கொள்கிறார்கள்.புதிதாக யாராவது பிறக்க வேண்டும் என்றால் யாராவது இறக்க வேண்டுமாம் இப்படிக் கருணைக்கொலையை அரசே அனுமதிக்கிறதாம்.


’ஆயுள்’ கதையில் கலாஷ் இனத்தில் இறந்தவர்களைக்கூட அங்கே எரிப்பதில்லை; புதைப்பதுமில்லை. சின்ன மரப்பெட்டிகளில் வைத்து மரணபீடத்தில் ஏற்றிவிடுவார்கள். அது அப்படியே மழையில் நனைந்து, வெயிலில் உலர்ந்து இயற்கையாகி காற்றில் கலந்துவிடும்.  கலாஷ் இனத்தில் பாஷாலி என்ற மாதவிலக்கு குடிசை உண்டு. அது ஆற்றின் ஓரத்தில் கிராமத்தை விட்டு தள்ளி இருக்கும். ஆண்கள் அணுகமுடியாத இடம். 

 

’செர்ரி மரம் ’ கதையில் கதைசொல்லியான பெயர் சொல்லாப் பெண் கேட்பாள், ’அம்மா உங்களைக் காதலிக்கவில்லையா அப்பா?’  ‘காதல் சோப் கட்டிபோல தேய்ந்து தேய்ந்து இறுதியில் ஒன்றுமே இல்லாமல் ஆகிவிடும்.’ அப்பா பலகையைத் திருப்பி வெள்ளை ராஜாவுக்காக விளையாட ஆரம்பித்தார். ’உன் தங்கைமார் எல்லாம் மணமுடித்துவிட்டார்கள். அந்த துயரம் உனக்கு ஒன்றுமே இல்லையா?’  ’என்ன துக்கம் அப்பா? உலகம் விதிவிலக்குகளால் நிரப்பப்பட்டிருக்கிறது என்று நீங்கள் தானே சொன்னீர்கள். பூமிக்கு வெகு சமீபத்தில் இருக்கும் வெள்ளிக் கிரகம் மற்றக் கிரகங்கள்போல் அல்லாமல் எதிர்பக்கமாகத்தானே சுழல்கிறது.’இப்படி அறிவியல் நறுக் இருக்கும்.
 

லெமிங் என்றொரு உயிரினம் உள்ளது ஸ்வீடன், நார்வே போன்ற நாடுகளில் மிகுந்து காணப்படும். ஐந்து அங்குலங்கள்தான் இருக்கும் .கட்டையான உருண்டையான தலை, சாம்பல் நிறம் .இப்படியாக பார்ப்பதற்கு ஐயோ என்று இருக்கும். புல், பூண்டு, தாவரம் எல்லாம் சாப்பிடும் .எவ்வளவு குட்டிகள் போடும் தெரியுமா? ஒரு வருடத்துக்கு 10 குட்டிகள் வரை ஈனும். ஆனால் பாவம் அவற்றுக்குப் பெரிய சோதனை ,மூன்று நான்கு வருடங்களில் அவற்றின் பெருக்கம் நாடு தாங்காது .சாப்பாடு போதாமல் போய்விடும். அப்போது அவையெல்லாம் கூட்டம் கூட்டமாக சேர்ந்து அப்படியே கடலில் மூழ்கிச் செத்துப் போகும். மறுபடி பெருக ஆரம்பிக்கும். நான்கு வருடங்களில் பழையபடி நாடு தாங்காது .மீண்டும் கடலுக்கு செல்லும் .இப்படியே தொடரும்.

 

பீதோவன் என்ற சிறந்த இசை மன்னர் ஸ்வரங்களை எழுதும்போதே அவர் மூளைக்குள் பெரிய வாத்தியங்கள் வாசித்தபடி இருக்குமாம். அது மாதிரித்தான் அம்மாவின் சமையலும். மூலக்கூறுகளைக் கலக்கும் போதே அந்த உணவின் சங்கீதம் அவர் காதுகளுக்குள் ஒலிக்கும். முன்பின் அனுபவிக்காத ஒரு பதார்த்தத்தை அவரிடம் கொடுத்தால் அதை ருசி பார்க்கும்போதே அதன் மூலக்கூறுகளைக் கூறிவிடுவார். அதே போல ஒன்றைச் சமைப்பதும் அவருக்கு பெரிய காரியமில்லை.

 

 பதினேழு ஆண்டுகள் பதுங்கி வாழ்ந்து மேலே வந்து இனச்சேர்க்கை செய்து விட்டு மீண்டும் உள்ளே செல்லும் ’சி காடா’ பூச்சி இனம் ஒன்றுள்ளது.  

 

ஒவ்வொரு வருடமும் கனடாவில் 11ம் மாதம் 11ம் தேதி காலை 11 மணிக்கு 2 நிமிட நேரம் மௌனம் அனுட்டிக்கப்படும். முதலாம் உலகப் போர் 1918 நவம்பர் மாதம் காலை 11 மணிக்கு முடிவுக்கு வந்ததை நினைவுகூரும் நாள். அன்றுதான் போர் நாடுகளுக்கு இடையில் சமாதான உடன்படிக்கை கையெழுத்தானது. கனடாவில் அந்த இரண்டு நிமிடம் பஸ்கள் ஓடாது. கார்கள் ஓடாது. தெரு நிசப்தமாக இருக்கும். வீடுகளில் ரேடியோக்களும் டிவிக்களும் அணைக்கப்பட்டிருக்கும். கனடா முழுக்க மௌனத்தில் ஆழ்ந்திருக்கும்.


’ஐரோப்பாவில் இருந்து ஆகக் குறைந்த தூரத்தில் நியூஃபவுண்லாண்ட் இருக்கிறது. 3200 கி.மீட்டர் தூரம்தான். கடல் அடி கேபிள் இங்கிருந்துதான் அயர்லாந்துக்கு போடப்பட்டது. தெரியுமா, ஆப்பிரஹாம் லிங்கன் 1865ல் சுடப்பட்டு இறந்தபோது அந்தச் செய்தி ஐரோப்பாவுக்கு போய்ச்சேர 10 நாள் எடுத்தது. ஆனால் அடுத்த வருடம், 1866ல் செய்திகள் பத்து செக்கண்டிலே ஐரோப்பாவுக்கு போய்ச் சேர்ந்தன. காரணம் கடல் அடி கேபிள் போடப்பட்டுவிட்டது.’


ஆசியப் பெண்களுக்கு பொதுவாக நாற்பது நாற்பத்தைந்து வயதிலேயே முழு விலக்கு வந்துவிடுகிறது .அவர்கள் பூப்பெய்திய காலத்தில் இருந்து அனேகமாக 30 வருடங்கள் வரை மட்டுமே கருவளர்ச்சி தொடரும் .அதற்குமேல் படிப்படியாக நின்றுவிடும்.

’முடிச்சு ’கதையில்  பீட்டர் டிரக்கர் மற்றும் கென்னத் கல்பிரெய்த் சொன்ன சித்தாந்தங்களையும்
பிரெடரிக் டைலர் எழுதி வைத்ததை எல்லாம் அசைபோடுகிறார்.சிந்தனை முறை மூன்று வகைப்படும் செக்குமாட்டு சிந்தனை,தொடர் சங்கிலி முறை ,பரவல் சிந்தனை என்று.
 ஆகாய விமானத்தை கண்டுபிடித்த ரைட் சகோதரர்களாகட்டும் பெனிசிலினைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் பிளமிங் போன்றவர்கள் பரவல் சிந்தனை மூலம் தான் தங்கள் மகா கண்டுபிடிப்புகளை உலகத்திற்கு அளித்தார்கள். கலீலியோவின் சிந்தனையும் பரவல் சிந்தனை என்கிறார்.


மனிதனால் நீண்டதூரம் ஓடமுடியும். ஒரு குதிரையும் மனிதனும் ஒரே நேரத்தில் புறப்பட்டால் குதிரை பாதி வழியில் நின்றுவிடும். மனிதன் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருப்பான். மரதன் போரில் கிரேக்கர்களின் வெற்றியை சொல்ல 26 மைல் தூரத்தை தாண்ட மனிதனைத்தான் அனுப்பினார்கள்; குதிரையை அல்ல. அது பாதி வழியிலேயே விழுந்து இறந்துபோயிருக்கும். 

 

தலைப்புகள் சொல்பவை!

 

அவர் தலைப்பு வைக்கும் விதத்தில் தனி பாணியைக் கையாள்கிறார்.சிலவற்றை பாத்திரத்தின் தலைப்புகளாக்கியிருப்பார்.பவித்ரா, பார்வதி , துரி,சிலம்பு செல்லப்பா, அக்கா ,ஸ்டைல் சிவகாமசுந்தரி  போன்றவை உதாரணங்கள்.சில கதைகளுக்குக் கதையின் குவிமையத்தைத் தலைப்பாக வைக்கிறார்.   நீளம் என நோக்கினால் ‘ ரி’ என ஓரெழுத்திலும் வைப்பார்.   ’மொசுமொசு என்று சடை வளர்த்த வெள்ளைமுடி ஆடுகள்’ ,"உன்னுடைய கால அவகாசம் இப்பொழுது தொடங்குகிறது' என நீளப்பெயர்களும் வைப்பார்.

 

லூனாவை எழுப்புவது, அருள் நாயகம் மாஸ்டரும் ஐன்ஸ்டீனும், முதல் விருந்து முதல் பூகம்பம் முதல் மனைவி,எங்கேயோ இப்ப மூன்று மணி, சுவருக்குள்ளே மறையும் படுக்கை,உன்னுடைய கால அவகாசம் இப்பொழுது தொடங்குகிறது ,வெள்ளிக்கிழமை இரவுகள், கடவுளை ஆச்சரியப்படுத்து, புதன்கிழமை உன்னுடைய முறை ,  ஒன்றைக் கடன் வாங்கு போன்றவை அதில் அடங்கும்.

 

கதையின் முகமாக அமைந்தவை என்று  தாத்தா விட்டுப் போன தட்டச்சு மெசின் , அண்ணனின் புகைப்படம் ,பாதிக் கிணறு,கம்ப்யூட்டர், ஆதிப் பண்பு, ஜகதலப்பிரதாபன் ,திருடர்கள், முதல் சம்பளம், வடக்கு வீதி,  போன்றவற்றைச் சொல்லலாம்.

 

சற்றே புதிர்த் தன்மையான தலைப்புகள், கதையை யூகிக்க முடியாதவை என்று மட்டுப்படுத்தப்பட்ட வினைச்சொற்கள்,

கொழுத்தாடு பிடிப்பேன், நிலமென்னும் நல்லாள், மொசுமொசுவென்று சடை வளர்த்த வெள்ளைமுடி ஆடுகள், திகடசக்கரம் போன்றவற்றைக் கூறலாம்.  அங்காடித் தெரு படத்திற்கு விமர்சனம் எழுதும்போது கூட யாரும் யூகிக்க முடியாத ’யானை வாழும் காடு’ என்று தலைப்பிட்டுள்ளார்.

இவரது சிறுகதைகளில்  கடைசி வரிக்குப் பிறகு வாசகன் எண்ணத்தில்  மீண்டும்  புத்துரு கொண்டு தொடங்குகிற கதைகள் அதிகம்.

 

கதைகளில் பயன்படுத்தியுள்ள சில பளிச் உதாரணங்கள்!

தண்ணீரில் அடிபட்ட ஒல்லித் தேங்காய்போல வெகுதூரத்துக்கு அப்பால் கரையொதுங்கினோம்.

வாத்தியார் தலையைப் பின்னால் வளைத்து முகட்டைப் பார்ப்பார். மந்திரவாதி வாய்க்குள் வாளை நுழைப்பதற்கு முன் தலையைப் பின்னால் சாய்ப்பதுபோல அது இருக்கும்.

ஓட்டுக்குள் அடங்கிய ஆமைபோல நான் அசையாமல் இருந்தேன்.

இரண்டு கன்னங்களையும் உள்ளிழுத்து கடித்துக் கொண்டிருப்பதுபோல ஒரு தோற்றம்.

 ஆங்கிலம் சரளமாக வந்தது; தமிழ் தத்தியது.

ஒழுக்கம் பற்றி நீண்ட பிரசங்கம் செய்தால் நிறுத்த மாட்டார். வகுப்பு முழுக்க வார்த்தைகளால் மூடப்பட்டு ஒரு கூடாரம்போல ஆகிவிடும்.
  
அவளுக்கு வான்கோழி போல கழுத்திலே சுருக்கங்கள் விழுந்து கிடக்கும்.

  
காருகுறிச்சி வாசிக்கும்போது அவருடைய கழுத்து படம் எடுக்கும் பாம்பினுடையதுபோல உப்பிப் பெருக்கும்.

அந்தப் பெண்ணின் முகம்கூட எனக்கு ஞாபகம் இல்லை. கை ஆடும் ஒருவர் எடுத்த புகைப்படம்போல உருவம் மங்கலாகவே நினைவில் இருந்தது. முகம் நிறைய அடக்கப்பட்ட ஒரு புன்னகையால் நிறைந்திருந்தது.

தூர நாட்டில் இருந்து தகரக் குழாய் வழியாகக் கதைப்பதுபோல அவர் குரல் வளம் இருக்கும். 

அந்தக் கோப்புடன் சம்பந்தமுள்ள வேறு சில கோப்புகளில் தகவல்களைத் திரட்டியபோது இருட்டறையில் புகைப்படம் கழுவும்போது மெள்ள மெள்ளப் படம் துலங்குவதுபோல ஒரு காட்சி உண்டானது. அது நல்ல காட்சியில்லை.

காற்று இறுக்கமாக இருந்தது. ஒரு வாளிருந்தால் அதைத் துண்டாக வெட்டியிருக்கலாம்.  


ஓர் ஆதிவாசி, மிருக வேட்டையாட குகையிலிருந்து புறப்படுவதுபோல, மெல்ல அடிவைத்து வீட்டின் வாசல்வழியாக நாங்கள் வெளியேறினோம்.

அந்தச் சிறு செய்கையில் அஹமத்தின் கண்கள் வெயிலைப்போல பிரகாசித்தன.

எரிக்ஸன் தனக்கே உரிய பாணியில் நேரிடையாகப் பதில் சொல்லாமல் சுற்றி வளைத்து ஆரம்பிக்கிறான். சுருள் வாளைப் போல் அவனுடைய வாதங்கள் எல்லாம் திருப்பித் திருப்பி தொடங்கிய இடத்திலேயே வந்து விழுகின்றன

பல்லியின் வயிற்றில் குட்டி தெரிவதுபோல அவள் கைவிரல்களில் ஓடும் ரத்தம் கூட அவருக்கு தெரிந்தது. பந்துபோன்ற அந்த கைவிரல் குவியலை எடுத்து முத்தமிடவேண்டும் போல பட்டது.

இப்பொழுதெல்லாம் அவள் கிட்ட வரும் சமயங்களில் இரண்டு நாள் தண்­ணீரில் ஊறவைத்த பயறுபோல ஒரு விதமான பச்சை வாசனை வருகிறது. அவளுடைய குரல் உடைந்து ரஹஸ்யம் பேசுவதுபோல இருக்கிறது.

உறைந்த மழைபோல கேசங்கள் அவள் கன்னத்தில் வழிந்து கிடந்தன.

அருகில் வந்ததும் அவளுக்கே உரிய பெண் வாசனை சொட்டு நீலம் தண்ணீ­ரில் பரவுவதுபோல மெல்ல பரவியது.

அவள் கண்கள் தெரிந்தன. அவை அபூர்வமாக ஓர் இலுப்பக் கொட்டையைப் பிளந்ததுபோல இருபக்கமும் கூராக இருந்தன.


அம்மா ஏன் நீங்கள் சிரிப்பதில்லை. அவர் சிரித்தார்; அது முழுச் சிரிப்பு இல்லை. இரண்டாம் பரிசு பெற்ற ஒருவரின் சிரிப்பு.

பெரிய பெரிய பொதிகளுடன் தரையில் உட்கார்ந்திருந்தனர். சிலர் குழந்தைகளையும் முதுகில்
கட்டியிருந்தார்கள். முதல் பார்வைக்கு நூற்றுக் கணக்கான கறையான் புற்றுகள் தரையிலே முளைத்துவிட்டது போலவே தோன்றியது.

 

கப்பல் மூழ்குவதுபோல உன் அம்மாவின் உயரம் குறைய ஆரம்பித்தது. அடுத்த கணம் முழங்காலில் விழுந்துவிடுவார் போல பட்டது.

 

அவருடைய ஒவ்வொரு சொல்லையும், கடற்கரையில் அபூர்வ கிளிஞ்சல்களை சேகரிப்பதுபோல, ஆர்வத்துடன் பொறுக்கிக் கொண்டனர்.


அவர் தன் கல்லீரலை எப்படி விட்டுவிட்டு போகமாட்டாரோ அப்படியே அந்தக் கைப்பையையும் அவர் எங்கே போனாலும் தன்னுடனே எடுத்துப் போவார். 

 

‘போரினால் ஒன்றும் சாதிக்க முடியாது. மனிதனின் உண்மையான எதிரி பசி. அதற்கு எதிராகத்தான் போராடவேண்டும்.’ அவன் நீட்டிய தட்டில் இருந்த உருண்டை என்னைப் பார்த்தது.  ‘ஸ்வாஹிலி  மொழியில் ’பசிக்கிறது’ என்று சொல்வதில்லை. ’பசி கேட்கிறது’ என்றுதான் சொல்வார்கள்’ என்றான். என்ன ஆச்சரியம்! கடந்த ஆறு மாதங்களாக பசி என் காதுகளுக்குள் 24 மணிநேரமும் கேட்டபடியேதான் இருந்தது.

 

பரமேஸ்வரனிடமிருந்து தோல்விச் சிரிப்பு ஒன்று வெளிப்பட்டது.


சிறு குருவி வாய் பிளந்ததுபோல சதை பிரிந்துபோய் காணப்பட்டது.


அறைக்குள் நுழைந்ததும் பெண் கதவைச் சாத்தினார். ‘உடையை களையுங்கள்.’ மூன்று வயதுக் குழந்தையிடம் சாதாரணமாக ‘வாழைப்பழத்தை உரி’ என்று சொல்வதுபோல இருந்தது.

 


நத்தை ஊர்ந்த தடம்போல முகத்திலே கண்ணீர் காய்ந்த கோடு.

ஐயாவின் வழுக்கை விழுந்த முன்னந்தலை கரப்பான் பூச்சி முதுகுபோல மினுங்கியது.

வயிறு முட்ட பால் குடித்த கண் திறக்காத நாய்க்குட்டி போல பரிபூரண நிம்மதியோடு இவர் அயர்ந்துபோய் கிடந்தார்.

குளிக்கும்போது காதுக்குள் தண்ணீர் போய்விட்டதுபோல தலையை பலமாக ஆட்டினாள்.


இந்த உலகத்தில் பழிவாங்கும் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு ஈடே கிடையாது.  

என்னோடு வந்த நண்பன் காலில் எறும்பு கடிப்பது போல மாறி, மாறிக் காலை வைத்தபடி நின்றான்.

உள்ளிழுத்த தலையை ஆமை மெள்ள மெள்ள வெளியே விடுவதுபோல் சங்கீதாவும் மெதுவாக வெளியே வரலானாள். பள்ளிக்கு புதுத் தென்புடன் வந்து போனாள்.

உன்னுடைய வில்லங்கங்களை ஒட்டுமொத்தமாக தீர்க்க வேண்டுமானால் பிரச்சனையின் உயிர்நாடியைக் கண்டுபிடிக்க வேணும். அல்லாவிடின் மலேரியாக் காய்ச்சல்காரனுக்கு மாதவிடாய் நிற்க மருந்து கொடுத்தது போல அனர்த்தம்தான் விளையும்.

கழுத்தை முறித்து பின்னுக்கு வளைத்து ஒரு விமானத்தைப் பார்ப்பதுபோல நான் அவரைப் பார்த்தேன்.

முதுகில் யாரோ கத்தியை நீட்டியதுபோல நேராக உட்கார்ந்து டீ குடித்துக்கொண்டிருந்தான்.

தமிழ் சினிமாவில் காலை காட்டி, கையை காட்டி, முதுகை காட்டி இறுதியில் கதாநாயகியைக் காட்டுவதுபோல காருகுறிச்சி மெள்ள மெள்ள ராகத்தை வெளியே விடுவார்.

 

மொழிபெயர்ப்பாளராக!

ஆன்டன் செகாவின் வேட்டைக்காரனை அ.முத்துலிங்கம் மொழிபெயர்த்திருக்கிறார். மொழிபெயர்ப்பில் இவர் எப்படி இயங்கி இருக்கிறார் என்பதற்காக அதே கதையை மூன்று மொழிபெயர்ப்புகளை மாற்றி மாற்றி படித்து ஒப்பிட்டுப்பார்த்தபோது பெரும்பாலும் ஒரே விஷயத்தைக் கூறினாலும் சில வரிகளை நடுவில் போட்டு ஜரிகை போல ஜீவனை மினுங்க வைத்துள்ளார்.அது உயிர்ப்புள்ள வரிகளாக இருந்ததை உணரமுடிந்தது .அது அவர்களுக்குத் தோன்றவில்லை. இதைப் பார்க்கும் போது’ மசாஜ் மருத்துவர்’ ,’ லூனாவை எழுப்புவது ’ , ’மாவோவுக்காக ஆடை களைவது’  போன்ற    மொழிபெயர்ப்பு கதைகளிலும் அசல் கதையின் ஆன்மா பிசகி இருக்காது என்று நம்ப முடியும்.

 

மொழியும் செல்நெறியும் !

 

முத்துலிங்கத்தின் அக்கா சிறுகதைத்தொகுப்பு  1964-ல் வெளியானது.

திகடசக்கரம் 1995-லும் வம்சவிருத்தி 96 , வடக்கு வீதி 98 ,மகாராஜாவின் ரயில் வண்டி 2001 என வெளியிடப்பட்டன. முத்துலிங்கம் கதைகள் முழுத்தொகுப்பு 2004 வரை எழுதியவை பிறகு வெளியானது.

 

இப்படிப் பல தொகுப்புகள் வந்துள்ளன .’அக்கா ’ தொகுப்பில் வரும் கதைகளை விட ’ திகடசக்கரம் ’ சேகரிப்பில் சற்று மேம்பட்ட மொழிநடையில் எழுதி இருப்பதை உணரமுடியும். அதன் பிறகான தொகுப்புகளிலும் இதைவிட பல படிகள் தாண்டிய சொல்மொழி மேம்பாட்டைக் காண முடியும்.அறுபதுகளில் எழுதிய தொகுப்பில்  உபரிச்சொற்கள் மிகுந்திருக்கும்.கதையோட்டம் மிதமான வேகத்தில் இருக்கும். பிறகு போகப்போக மொழிநடையில் சீர்பட்டு கூர்மை பெற்றுள்ளது. இப்போதைய கதைகளில் எல்லாம் சுண்டக்காய்ச்சிய சொற்களோடும்   வடிகட்டிய வாக்கியங்களோடும் எழுதுகிறார்.அந்த அளவுக்கு தொடர்பயிற்சியால் மொழி வசப்பட்டு இருக்கிறது.

 

அ.முத்துலிங்கம் எழுதிய  ஆரம்பகாலக் கதைகளில் ஈழத்து எழுத்தாளர் என்கிற முகம்  தெரியும் .போகப்போக அதில் இருந்து சட்டை உரித்துக்கொண்டு வெளியே வந்து உலகத் தமிழ் எழுத்தாளராக பரிமளித்திருக்கிறார் .இப்போது இவர் பயன்படுத்தும் மொழி உலகத் தமிழர்களுக்குப் புரியும் வகையில் உள்ளது. வட்டார வழக்குகளை சொற்ப அளவிலேயே பயன்படுத்துகிறார். அது ஒரு தடையாக ,இடையூறாக இருக்கக்கூடாது என உணர்ந்து பொது மொழியைக் கையாளுகிறார். எழுதும்போது உலகத் தன்மையுடன் எழுதுகிறார். 

 

இலங்கையில் போருக்குப் பின் நிறைய போர் சார்ந்த இலக்கியங்கள் வர ஆரம்பித்துவிட்டன. நிறைய எழுதுகிறார்கள்.இவர் இப்படி நிறைய எழுதவில்லை என்று சிலர் புகார் சொல்வதுண்டு.என்றாலும் இவர் எழுதிய கதைகளில்  ஈழப்போர் சார்ந்து ஆங்காங்கே பதிவாகி உள்ளதை  மறுக்க முடியாது . இலங்கையில் இருந்ததைவிட இலங்கைக்கு வெளியே இவர் வாழ்ந்த காலம் அதிகம். ஆப்பிரிக்க நாடுகளில் 20  ஆண்டுகள் வாழ்வைக்  கழித்து கனடாவில் 20 ஆண்டுகள் என்று கடந்தவர். அதனால் ஈழம் சார்ந்த அனுபவங்கள் இவரிடம் குறைவாக  இருப்பதும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

 

தி .ஜானகிராமன்  அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை எழுதவில்லையே என்று சிலர் கூறுவதுண்டு . அவர் பெரிதும் அறிந்த உலகத்தைப் பற்றியே அதிகம் எழுதி இருக்கிறார். ஓர் எழுத்தாளரும் அப்படித்தான் செய்ய முடியும் .அப்படித்தான் முத்துலிங்கமும்

அவர் உற்றுணர்ந்த உலகத்தை எழுதுகிறார். என்றாலும் ஈழத்து  நினைவுகளையும் எழுதிக்  கொண்டுதான் இருக்கிறார்.அவர் அறிந்த ஈழம் பற்றிக் கணிசமான கதைகள் வந்துள்ளன.

 

இலங்கையை விட்டு வெளியேறி நாட்டுக்கு வெளியே அவர் தங்கியிருந்த காலம் நீளமானது. அந்த புலம்பெயர் அனுபவங்களைத் தன் கதைகளில் பதிவு செய்கிறார். புலம்பெயர் வாழ்க்கை என்பது இன்று ஓர் இலக்கிய வகைமையாக மாறி உள்ளது. அதில் முத்துலிங்கம் முன்னணியில் இருக்கிறார் எனலாம்.சொந்தநாட்டுக்கு வெளியேயான வாழ்வையும் பதிவு செய்ய வேண்டியுள்ளதுதானே?

 

அ.முத்துலிங்கம் ஒரு நூல் விமர்சனம் எழுதினாலும்  தனி நபரைப் பற்றி பதிவு எழுதினாலும் அதில் ஒரு புனைவுத்தன்மை வந்து அமர்ந்து கொள்கிறது .  அவர் ’ஒரு லட்சம் டொலர் புத்தகம்’ என்கிற நூல் விமர்சனத்தில் கதைத் தன்மை காட்டி சுவாரஸ்யம் கொள்ள வைக்கிறார். ‘வந்திடு டுப்புடு’ என்கிற பதிவில் தன்னுடைய ரசிகர் பற்றிப் பதிய வைக்கிறார்.அவரது எல்லாவிதமான கட்டுரைகளிலும் ’இது மொழி மேம்பட்ட எழுத்தாளர் எழுதியது’ என்கிற கையொப்பத்தை இட்டுச் செல்கிறார்.இவரது படைப்புகளில் கதை சொல்லும் நிதானம்  ஆரம்பத்தை விட மிகவும் மேம்பட்டிருக்கிறது கூர்பட்டிருக்கிறது. அவ்வப்போது புதிய முயற்சிகளில் உத்திகளில் சோதனை செய்து பார்க்கிறார். அ.முத்துலிங்கம் தமிழில் கதைகள் மட்டுமல்ல விமர்சனம்,நேர்காணல்,மொழிபெயர்ப்பு என பலமுனைகளிலும் முயலும், எழுதும் உலக எழுத்தாளராக  மிளிர்கிறார் எனலாம்.

 

-அருள்செல்வன்


 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...