Posted : செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 19 , 2022 10:48:27 IST
‛‛இலங்கையில் நிலவும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு எனது அரசின் சில தவறுகளும், கொரோனா பாதிப்பு உள்ளிட்டவையே காரணம்” என அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் அரசுக்கு எதிராக பொதுமக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளன. அதேபோல், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே ஏற்பட்ட அரசியல் நெருக்கடியால் 26 அமைச்சர்களும் சமீபத்தில் ராஜினாமா செய்தனர். அதன்பிறகு நிதி உள்பட 4 துறைகளில் மட்டும் புதிய அமைச்சர்களை அதிபர் கோத்தபய ராஜபக்சே நியமித்தார். நேற்று முன்தினம் இலங்கை அதிபர் மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தின் முடிவில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்கத் திட்டமிடப்பட்டது. இதையடுத்து நேற்று புதிய அமைச்சரவை பதவி ஏற்றது. இதில் 17 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், புதிய அமைச்சர்கள் மத்தியில் பேசிய அதிபர் கோத்தபய ராஜபக்சே, “கடந்த இரண்டரை வருடங்களில் நாம் பெரிய வால்களைச் சந்தித்துள்ளோம். கொரோனா பரவல், கடன் சுமை மற்றும் எனது அரசின் தவறுகளால் தற்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது சரிசெய்யப்பட வேண்டும். இந்த பிரச்சனைகளை தீர்க்க தீர்வு கண்டறிய வேண்டும். மேலும் மக்களின் நம்பிக்கையையும் நாம் பெற வேண்டும். பொருளாதார நெருக்கடி, இதையடுத்து உருவான அரசியல் நெருக்கடி ஆகியவற்றுக்குத் தீர்வு காண முயன்று வருகிறோம்.
கடன் நெருக்கடியை சமாளிக்க முன்கூட்டியே சர்வதேச நாணய நிதியத்தை அணுகியிருக்க வேண்டும். மேலும், இலங்கையில் முழுமையாக இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கும் வகையில் ரசாயன உரத்தை தடை செய்திருக்கக் கூடாது. பொருளாதார நெருக்கடியால் இன்று மக்கள் பெரும் அழுத்தத்திலும், கோபத்திலும் உள்ளனர். இதற்கு நான் வருந்துகிறேன். அனைவரும் ஒன்றிணைந்து நாட்டில் உள்ள பிரச்சனையைத் தீர்க்க வேண்டும்'' என்றார்.